தமிழ் இலக்கிய உலகில் காப்பியம் என்ற வடிவம்

இன்று நமக்குக் கிடைக்கும் தமிழ் இலக்கிய வரலாறே ஒரு புதுமையான நவீன புதினம் போல் காணப்படுகிறது. பிற மொழி இலக்கிய வரலாறு போல் இல்லை. தொடக்கம் புலப்படவில்லை. நன்கு வளர்ந்து முதிர்ந்த ஒரு மொழியின் இலக்கணத்தைக் கூறும் மொழியியல் அதிசயமாய்த் தொல்காப்பியம் திடீரெனத் தோன்றுகிறது. அதன் பின் விளைவதெல்லாம் மயக்கும் மாயவித்தை போல் இருக்கிறது. தமிழ் வானில் பதினெட்டு நட்சத்திர மணடலங்கள் தோன்றுகின்றன. அவற்றில் ஆயிரக் கணக்கான நட்சத்திரப் பூக்கள் மின்னுகின்றன. இவற்றை சங்க இலக்கியம் என்று கூறுகிறார்கள். முத்து முத்தாக எத்தனை கவிதைகள்.

தாமரைத்

தண் தாது ஊதி மீமிசைச் சாந்தில்

தொடுத்த தீம் தேன் போல  (நற்றிணை1)

தாமரை மலர்களில் தேனை எடுத்து சந்தன மரத்தின் உச்சியில் தேனீக்கள் கூடு கட்டுவது போல சங்கத் தமிழ்ப் புலவர்கள் இயல்பான வாழ்க்கை நிகழ்வுகளில் சேகரித்த இணையற்ற நாடகங்களைப் பலநூறு பாடல்களாகப் பாடியுள்ளனர்.

இந்த வியப்பு அடங்குவதற்குள் அடுத்த அதிசயமாகச் சிலப்பதிகாரம் என்ற நவீன காப்பியம் பிறக்கிறது. அரசர்களைக் கைவிட்டு விட்டு சாமானியர்களைக் காப்பியத் தலைவர்கள் ஆக்குகிறது. நீதி பிறழ்ந்த மன்னனை மாய்த்தும் அவன் ஆண்ட நிலத்தை எரித்தும் கணவனை இழந்த ஒரு சிறுபெண் முதன் முதலில் கலகத்தமிழை அரங்கேற்றுகிறாள். வடிவமைப்பிலும் கதையமைப்பிலும் ஒரு நவீன முத்தமிழ் நாடகம். கவிதையில் ஒரு கற்கண்டுப் புதினம். இதன் புதுமையையும் நுட்பங்களையும் முறியடிக்கும் விதத்தில் ஒரு காப்பியம் உலக அளவில் இன்றளவும் தோன்றவில்லை என்றே கூறலாம்.

அடுத்து பல காப்பியங்கள் தோன்றினாலும் ஆயிரம் காலத்துக்குப் பின் காப்பியம் பாடுவதற்கென்றே பிறந்த கம்பன் கற்பனையில் ஓர் அற்புதத்தை விளைவிக்கிறான். தமிழ் இவனில் இனிமை பெறுகிறது. கன்னித் தமிழுக்கு கற்பனைச் சிறகுகளைப் பூட்டுகிறான். இமய மலை உயரத்துக்கு இலக்கியச் சின்னத்தை அமைக்கிறான். இவன் நிலத்துக்கு வந்த நித்திலச் சூரியன்.  வெய்யோன் ஒளியையும் தன் மேனியில் இருந்து எழும் ஒளியால் மறைத்த கம்பன் காவியத்துக்கு ஈடாக ஒரு தமிழ்க் காவியத்தைப் படைக்க நாம் ஒரு நூறு காப்பியங்களையாவது படைத்துப் பார்க்க வேண்டும். அந்த வகையில் ஒரு சிறு முயற்சியே இளம்நிலவனின் மகாகாவியம்.

கம்பனுக்குப் பின் தமிழில் தோன்றிய காவியங்கள் பலவும் குறுங்காப்பிய வகையைச் சார்ந்தவையாகும். பாரதி, பாவேந்தர், தமிழ் ஒளி,  கண்ணதாசன், கம்பதாசன், ச.து.சு. யோகி, முடியரசன், வாணிதாசன், கா.மு.ஷெரிப், நா. காமராசன், பெருஞ்சித்திரனார், வைரமுத்து, நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை, ஞானி, ஈழத்து மகாகவி போன்ற பல தலைசிறந்த கவிஞர்களின் சிறு காவியங்கள் இனிமையும் எளிமையும் நிறைந்தவையாகும்.[1] ஆனால் நாம் இங்கு பெருங்காப்பியங்களையே கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். புராணங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.  தலைவர்களைப் பற்றி பாடிய நீண்ட பாடல்கள் வாழ்க்கை வரலாற்று ஓவியங்களே. இந்த வகையில் அளவிலும் பாடுபொருளிலும் தனித்துவம் வாய்ந்ததாக பின்வரும் காவியங்களைக் குறிப்பிடலாம்:

கவியோகி சுத்தானந்த பாரதியின் பாரத சக்தி மகாகாவியம் 5 காண்டங்களையும் 50000 அடிகளையும் கொண்ட மாபெரும் படைப்பு. இந்நூலுக்கு அண்ணல் காந்தி அடிகள், அன்னிபெசண்ட் அம்மையார், சுவாமி சிவானந்தர், ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள், வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை, நவநீத கிருட்டிண பாரதியார், மட்டக்களப்பு மகாகவி, மகா மகோபாத்யாய உ.வே. சாமிநாதையர், திரு.வி. கல்யாண சுந்தரனார் முதலிய சான்றோர்கள் பாராட்டுரையும் டாக்டர் மு.வரதராசனார் சிறப்புப் பாயிரமும் அளித்துள்ளனர். தெளிந்த தமிழ்நடையும், திகட்டாத கருத்துகளையும் வாரிவழங்கும் இந்த மாபெரும் படைப்பை வழக்கம்போல் தமிழுலகம் உச்சிமோந்து போற்றுவதாகத் தெரியவில்லை.

புலவர் குழந்தையின் இராவண காவியம் – இராவண காவியம் மொத்தம் ஐந்து காண்டங்களையும் 3,100 பாடல்களையும் 57 படலங்களையும் கொண்டுள்ளது. மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் படைத்த இராமாயணத்திற்கு எதிர் இலக்கியமாக அமைந்த இந்தப் பெருங்காப்பியத்தை எழுதத் துணிந்த கவிஞரைப் பாராட்டியே தீர வேண்டும். விவிலியக் கருத்துகளை விமரிசித்து ஆங்கிலத்தில் பலநூறு படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் தமிழ்ச் சூழலில் இது ஒரு புரட்சியும் புதுமையும் ஆகும். இது பகுத்தறிவாளர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டாலும் பொது இலக்கிய உலகில் இதன் வரவேற்பு அதிக அளவில் இல்லை என்பது நிதரிசனமான உண்மையாகும். அடுத்து, பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் எழுதிய சேதுகாவியம் . தலைமுறைக் காண்டம், இயற்கை வியப்பார் எழுச்சிக் காண்டம் உள்ளிட்ட பல பகுதிகளைக் கொண்டது. தமிழ் மொழியின் பெருமை, இயற்கை வளம் மற்றும் மனித வாழ்க்கையின் மேம்பாட்டை கவிதை வடிவில் விளக்குகிறது.

பல நூறு குறுங்காவியங்களும் ஒரு சில பெருங்காப்பியங்களும் தற்காலத் தமிழில் தோன்றி இருந்தாலும் இவற்றில் எல்லாம் கதைப்பின்னலிலும் கருத்துகளை நிலைநிறுத்துவதிலும் புதிய உத்திகளும் நவீன பாணிகளும் பின்பற்றப்படவில்லை என்பது எதார்த்தம். ஒட்டுமொத்தத்தில் நவீன தமிழ்ப் புதினங்களில் நடைபெற்ற பரிசோதனைகளும் புதுப்புது உத்திகளை தழுவுதலும் தமிழ்க் காப்பிய இலக்கியத்தில் நடைபெறவில்லை. கவிதை நடையில் கதைகளைக் கூறும் முயற்சிகளே என்று பொதுவாகக் கூறலாம். தமிழில் புதுப்புது காவியங்கள் தோன்ற வேண்டுமானால் உலகளாவிய கதைகளும் உத்திகளும் கருத்துகளும் உள்ளீர்க்கப்பட வேண்டும். காவிய இலக்கியத்தைப் புதினங்களைப் போல நவீனப்படுத்த வேண்டும். அப்படியும் தமிழ் வாசகர்கள் படிப்பார்களா என்ற கேள்விக்கு பதில் கூறமுடியாது. பழந்தமிழ் இலக்கியங்களையும் சிறந்த நவீன படைப்புகளையும் (பொழுதுபோக்குக்கான நவீனக் குப்பைகளை இதில் சேர்க்கவில்லை)  எத்தனை தமிழர்கள் படித்தார்கள் என்ற கேள்விக்குள் இதன் பதில் அடங்கி இருக்கலாம்.

இளம்நிலவனின் மகாகாவியம் வாசகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், சிரமத்தைக் குறைப்பதற்காகவும், ஆர்வத்தை உருவாக்குவதற்காகவும் துணிந்து காப்பிய மரபுகளை மீறி புதினங்களைப் பின்பற்றி சில நவீன உத்திகளைப் பயன்படுத்துகிறது.

காவிய நடை: பொதுவாகக் காப்பியங்கள் பயன்படுத்தும் செய்யுள்/கவிதை நடை உயர்வானவைகளாகவும் உட்சாரம் நிரம்பியவைகளாகவும் தனித்தமிழல் ஆனவைகளாகவும் இருந்தாலும் பொதுவான வாசகர்களுக்கு ஓர் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

பாழி டத்தினிற் பரந்ததோர் பம்பர வியக்கம்:

யாழி சைதரும் அகரத்தால் அம்பரம் விழிக்க,

வாழி சைதரும் உகரத்தால் வளர்தரும் அணுக்கள்

சூழி சைதரும் மகரத்தாற் சுழன்றன விரைந்தே

(பாரத மகாசக்தி காவியம், சித்தி காண்டம், சிருட்டி படலம் அடிகள் 65-68).

இது ஒரு மிகச் சிறந்த செய்யுள் கட்டமைப்பு. கோல் கொண்டு அளந்து கட்டிய யாப்பு. உயர்தனிச் செந்தமிழ் நடை கொண்டது. மகா ஞானியான யோகியின் இசைநுணுக்கம் பொதிந்தது. பேரறிஞரான கவிஞரின் மொழிப் புலமை பொங்கித் ததும்புவது. இதைப் புரிந்துகொள்ள சிறந்த இலக்கிய அறிவு தேவை. தமிழ் கற்றவர்களும் நன்கு புரிந்து கொள்ள இதற்கு உரை தேவை. இது இருபதாம் நூற்றாண்டில் பாடப்பட்டதுதான்.

ஆயிரங் கல்லி நகன்ற பரப்ப

தாயய னாட ரவாவுற, நீங்கிப்

போயவ ரேங்கப் பொலிவுறு செல்வம்

தாயது பண்டக சாலையை மானும்

(இராவண காவியம், தமிழகக் காண்டம், தமிழகப் படலம் 7)

புலவர் குழந்தையின் இந்த நடை கம்பனின் நடையைப் போன்றது. உரை இல்லாமல் தமிழ் படித்தவனும் புரிந்துகொள்ளுதல் கடினம். இது சீரிய செந்தமிழ் நடை. புலவோர் போற்றும் நடை. இதுவும் இருபதாம் நூற்றாண்டில் பாடப்பட்டதுதான்.காவியம் என்றாலே புலவர்களும், தமிழ் அறிஞர்களும் இத்தகைய நடையையே விரும்பிப் பாராட்டுவார்கள்.

ஆனால் பாரதியும் பாவேந்தரும் இந்தப் பழந்தமிழ் நடையைத் தளர்த்தி விட்டனர்.

நன்றி கெட்ட விதுரா, சிறிதும்

      நாண மற்ற விதுரா,

தின்ற உப்பினுக்கே நாசந்

      தேடுகின்ற விதுரா,

அன்று தொட்டு நீயும் எங்கள்

      அழிவு நாடுகின்றாய்;

மன்றி லுன்னை வைத்தான் எந்தை

      மதியை என்னு ரைப்பேன்! (பாஞ்சாலி சபதம்)

பண்டைய தமிழை இன்றைய துள்ளல் தமிழ் ஆக்கிவிட்டான் ஒப்புயர்வற்ற பாரதி. அதிலும் இணையற்ற தன் காப்பியத்தில். இதைப் படிக்கவும் புரிந்துகொள்ளவும் பல்கலைக் கழகத்துக்குச் சென்று படிக்க வேண்டியதில்லை.

சீர்மிகுத்த கதிர்நாட்டின் மேலே, அந்தத்

திறல்மிகுத்த வேழநாட் டுப்ப டைகள்,

போர்தொடுக்கப் பாய்ந்தனவாம் கடலைப் போலே!

பொன்னொளியைப் பாய்ச்சுகின்ற தேர்ப்ப டைகள்,

கார்மிகுத்தாற் போலேயா னைப்ப டைகள்,

கழுத்துமயிர் ஆடுகுதி ரைப்ப டைகள்,

நேர்மிகுத்த வில், வேல், வாள் துாக்கி வந்த

நெடியகா லாட்படைகள் இவை யாவும்,

(பாண்டியன் பரிசு)

பாவேந்தர் பாரதிதாசனின் காவியக் கவிதை நடை இது. இருபதாம் நூற்றாண்டில் இந்த நடைதான் தேவைப்பட்டது. இந்தச் செந்தமிழ்ப் பாவலர்கள் இருவரும் ஒரு பெருங்காவியம் பாடாதது தமிழுக்குப் பெரும் இழப்பே.


[1] இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் காப்பிய மரபில் தமிழ்ஒளி – வீ அரசு (கீற்று)

ஜேஆர்

இளம்நிலவனின் மகாகாவியம்

இன்றைக் கிழித்து எழும் ஒளிநிலவு

ஏங்கவைக்கும் ஆங்கில இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கியத்தின் மேல் ஆராக் காதல்கொண்ட எனக்கு ஆங்கில இலக்கிய வரலாற்றைப் படிக்கும் போதெல்லாம் ஓர் இனிய பொறாமை ஏற்படும். கிறிஸ்துவுக்குப் பின் ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில்தான் இன்று நாம் இங்கிலாந்து என்று கூறும் நிலப்பரப்பை ஆங்கிலோ சாக்‌ஷன்கள் கைப்பற்றினர். ஏழாம் நுற்றாண்டில்தான் கிறித்துவ ஊழியர்கள் அவர்களுக்கு எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தனர். இந்தக் காலகட்டத்தில் செட்மன், பீட் ஆகியோர் எழுதத் தொடங்கினர். பியோவுல்ஃப் என்ற காப்பியம்பாடப்பட்டது. நாம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதக் கற்றுக்கொண்டுவிட்டோம். நிறைய இலக்கியங்களை எழுதினோம். ஆனால் இன்று இருபத்தொறாம் நூற்றாண்டில் ஆங்கிலம் நம்மை விட ஒரு நூறாண்டுக்கு முன் சென்று விட்டது.

வேளாண் யுகத்திலேயே இலக்கியத்தில் கால்பதிக்கத் தொடங்கிய இவர்கள் எண்ணற்ற அற்புதமான இலக்கியங்களை வடிக்கத் தொடங்கிவிட்டனர். கிறிஸ்துவுக்குப் பின் பதினான்காம் நூற்றாண்டில்தான் ஆங்கில இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் மொழியால் மனதை மயக்கும் வித்தகனான ஜெஃப்ரி சாசர் (Geoffrey Chaucer, 1342/43 – 1400) களத்தில் குதித்து கேன்டர்பரி கதைகளை (The Canterbury Tales) கூறத் தொடங்குகிறான். பின்னர் அங்கு வெடித்ததை ஓர் இலக்கியப் புரட்சி எனலாம். எட்மண்ட் ஸ்பென்சர், வில்லியம் ஷேக்ஸ்பியர், ஜான் டான், ஜான் மில்ட்டன், ஜான் டிரைடன், ஜோனத்தான் ஸ்விஃப்ட், அலக்சாந்தர் போப், சாமுவேல் ஜான்சன், வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஜேன் ஆஸ்டின், ஜான் கீட்ஸ், லார்டு பைரன், சார்லஸ் டிக்கன்ஸ், ஜார்ஜ் எலியட், தாமஸ் ஹார்டி, ஈட்ஸ், விர்ஜீனியா ஊல்ஃப், ஜேம்ஸ் ஜாய்ஸ், டி.எஸ். எலியட், ஜார்ஜ் ஆர்வல், சாமுவேல் பக்கட், வால்ட் விட்மன் . எத்தனை எத்தனை படைப்பாளிகள்! வானத்தில் உயரே சென்று வெடிக்கும் ஒரு வண்ண மத்தாப்பைப் போல எத்தனை வகையான கவிஞர்கள், உரைநடை விற்பன்னர்கள், ஆராய்ச்சி மேதைகள், புனைகதை ஆசிரியர்கள்! அன்று வெடித்துச் சிதறி விரிந்து பரந்து கொண்டிருந்த அறிவுலகில் பொங்கி வழிந்த அறிவு வெள்ளத்தை வாரிக் குடித்து இவர்கள் ஆங்கில மொழியையும் இலக்கியத்தையும் அளந்தறிய முடியாத சிகரத்தின் உச்சியில் கொண்டு சேர்த்துவிட்டனர்.

ஆங்கிலம் பிறந்து வளர்ந்து வான் விளிம்பை நோக்கி உயர்ந்து கொண்டிருந்த போது

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது

தன்னேர் இலாத தமிழைத்

தாய்மொழியாகக்  கொண்ட நாம் அடிமை இருளுக்குள் அடைபட்டுக் கிடந்தோம். இந்தக் கால கட்டத்தில் தமிழில் உலகத் தரம் வாய்ந்த கம்பன் என்ற ஒரே ஒரு கவிஞன்தான் தோன்றினான். அன்று உலகில் தோன்றி ஒளிவீசிக் கொண்டிருந்த அறிவியல் அறிவும் பல் துறை அறிவும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் தமிழ் வறுமையில் வாடிய கவிஞர்களின் நாவின் மூலம் தப்பிப் பிழைத்து இருபதாம் நூற்றாண்டுக்குள் நுழைந்தது. அப்போதே ஆங்கிலம் நம்மைவிட ஒரு நூறு மடங்கு உயரத்திற்கு வளர்ந்துவிட்டது.மொழிப் போட்டியில் ஆங்கிலம் தூங்காத முயல்! நாமோ பரிதாபத்திற்குரிய புலவர்கள் தூக்க முடியாமல் சுமந்துகொண்டு வந்த ஆமை.

புதிய தமிழ் எழுச்சி

ஆயினும் பின்னர் நடந்த அதிசயத்தை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இப்படிப் பாடுகிறார்:

பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!

குவிக்கும் கவிதைக் குயில் இந்நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு.

நீடு துயில்நீக்கப் பாடிவந்த நிலா

காடு கமழும் கற்பூரச் சொற்கோ

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்

திறம்பாட வந்த மறவன், புதிய

அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்

படரும் சாதிப் படைக்கு மருந்து

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்

தமிழால் பாரதி தகுதி பெற்றதும்

தமிழ்பாரதியால் தகுதி பெற்றதும்

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஓர் எதிர்பாராத திருப்பம். இன்னும் தெளியாத வண்ணக் கனவு.சிற்றிலக்கிய ஓடைகளை மறித்து நின்ற பேரிலக்கியப் பெருங்கடல். கம்பனுக்குப் பின் ஓர் ஆயிரம் ஆண்டு உறக்கத்தைக் கலைத்த கவிதைக் குயில். அதன் பின் தமிழில் புதுக் கவிதையின் பிரவாகம் தொடங்கியது. புனை கதைகள் புத்தெழுச்சியுடன் எட்டா உயரங்களை எட்டிப்பிடிக்கத் தொடங்கின. புதினமும் சிறுகதையும் தன்னுணர்ச்சிப் பாக்களும், புதுக்கவிதையும் புதிய எல்லைகளை வகுக்கத் தொடங்கின.

எனினும் கம்பனுக்குப் பின் ஒரு மகா காவியம் எழவில்லை. கவிதைதான் தமிழின் உயிர்த்துடிப்பு. கவிதையாகப் பிறந்து கவிதையாக வளர்ந்து கவிதையாக வாழ்ந்து வரும் கன்னித் தமிழில் நம்மால் ஏன் இன்னும் பல  நூற்றண்டுகளாக ஒரு மகா காவியத்தைப் படைக்க முடியவில்லை என்ற சிந்தனையின் தூண்டுதலால் அப்படிப்பட்ட ஒரு காவியத்தைப் படைக்க இளங்கவிஞர்களைத் தூண்டும் ஒரு முயற்சிப் பொறியே தன் காவியம் என்று கவிஞர் பிரகடனம் செய்கிறார். இளம் தமிழ்க் கவிஞர்கள் இந்தச் சவாலை ஏற்பார்களா?

ஜேஆர்

தமிழின் நவீன உரைகாவியங்கள்

பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி போற்றத் தக்கதாக உள்ளது. புதிய நடையும் புதிய உணர்வும் பொங்கி வழிகிறது. பாவேந்தரைத் தொடர்ந்து பல கவிஞர்கள் எரிமலைத் தமிழை உருவாக்கியுள்ளார்கள். தன்னுணர்ச்சிப் பாடல்கள் கடல்போல் பெருகியுள்ளன. புதுக் கவிதைகள் என்ற மதுக் கவிதைகள் சிறகடித்து பறக்கின்றன. ஆனால் தமிழில் பெருங்காவியங்களாகப் போற்றத்தக்க கவிதைப் படைப்புகள் இதுவரைக்கும் எழவில்லை என்பது ஒரு பெருங்குறையாகும்.

ஆனால் புதினம், சிறுகதை என்னும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி ஆரோக்கியமானதாகவும் எந்த ஓர் உலக மொழி இலக்கியத்துக்கும் ஈடுகொடுப்பதாகவும் இருக்கிறது. அப்படியானால் உலகளாவிய விருதுகளைத் தற்காலத் தமிழ் இலக்கியங்கள் ஏன் பெறவில்லை என்ற குதர்க்கமான கேள்விகளைச் சிலர் எழுப்பலாம். சிறந்த தமிழ்ப் படைப்புகள் சிறந்த முறையில் உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாததும் படைப்புகள் பற்றிய ஆங்கில மொழித் திறனாய்வுகளை-முன்மொழிவுகளை  உடனுக்குடன் உரிய தேர்வுக் குழுவினரின் பார்வைக்குக் கொண்டுசெல்லாததுமே தமிழ்ப்படைப்புகள் உரிய உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற முடியாமல் போனதற்கான காரணங்கள் ஆகும். உரிய கவனம் செலுத்தப்படாவிட்டால் இந்நிலை இன்னுமொரு நூறாண்டுகளுக்குத் தொடர்ந்தாலும் அதில் வியப்பில்லை.

வரலாற்று இலக்கியப் படுகையில் வெள்ளமென பேராற்றலுடன் புரண்டுவந்த தமிழ்க்கவிதையின் தேக்கத்தைத் தளர்த்தி அதன் போக்கை மகாகவி பாரதி  புதிய வழியில் மாற்றினான். அதைப்போல உரைகளில் மட்டுமே ஓங்காரமிட்டுக் கொண்டிருந்த தமிழ் உரைநடையை விடுவித்து அதனுடன் மக்கள் மொழியின் உயிர்த்துடிப்பை இரண்டறக் கலந்து தமிழை இயங்கும் செம்மொழியாக மாற்றிய பெருமை தமிழின் கதையிலக்கிய படைப்பாளிகளையே சேரும். ஒரு பருந்துப் பார்வை பார்த்தாலே போதும். உலக இலக்கியத் தரம் வாய்ந்த பல படைப்பாளிகள் சிக்குவார்கள். தமிழின் எளிமையையும் எழில் நலத்தையும் எத்தனை வகையாக எடுத்தாள்கிறார்கள். எத்தனை வகையான கதைப் பின்னல்கள். எத்தனை வகையான மொழி நடைகள். உள்ளத்தை உருக்கும் உரையாடல்கள். எண்ணத்தைக் கவரும் வருணனைகள். சங்க இலக்கியத்தின் எளிமைக்கும் எதார்த்தத்திற்கும் எள்ளளவும் சளைக்காத எத்தனையோ வகையான அரும்பெரும் இலக்கியங்களை நவீன இலக்கிய படைப்பாளிகள் படைத்துத் தந்துள்ளார்கள், தொடர்ந்து படைத்துக்கொண்டு வருகிறார்கள்.

தமிழ் இலக்கியத்தின் வண்ணச் சிறகுகளாக விளங்கும் சில புகழ்பெற்ற நவீன படைப்போவியங்கள் உரைநடைக் காவியங்கள் என்று புகழப்படத் தக்கன. (பட்டியல் தரவரிசைப்படியானது அல்ல. பலநூறு உரைகாவியங்களில்  எடுத்துக்காட்டாக ஒருசிலவே) . ஒரு புளிய மரத்தின் கதை (சுந்தர ராமசாமி), ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஜெயகாந்தன்), கோபல்ல கிராமம் (கி ராஜநாராயணன்), பொய்த்தேவு ( க நா சுப்ரமணியம்) தலைமுறைகள் (நீலபத்மநாபன்). விஷ்ணுபுரம் (ஜெயமோகன்), 18 வது அட்சக்கோடு (அசோகமித்திரன்), சாயாவனம் ( சா. கந்தசாமி), கோவேறு கழுதைகள் (இமையம்), மோகமுள் (தி.ஜானகிராமன்) கடல்புரத்தில்   (வண்ணநிலவன்), புயலிலே ஒரு தோணி (ப. சிங்காரம்), அம்மா வந்தாள்  (தி.ஜானகிராமன்), நாகம்மாள் (ஆர்.சண்முகசுந்தரம்),  நினைவுப்பாதை (நகுலன்), கரைந்த நிழல்கள் (அசோகமித்திரன்), புத்தம் வீடு (ஹெப்சிபா ஜேசுதாசன்), ஆழி சூழ் உலகு (டி.குரூஸ்), வெக்கை  (பூமணி), கிருஷ்ணப்பருந்து  (ஆ.மாதவன்),  வானம் வசப்படும் (பிரபஞ்சன்) குருதிப்புனல் (இந்திரா பார்த்தசாரதி), நெடுங்குருதி (எஸ் ராமகிருஷ்ணன், மணற்கடிகை (எம். கோபாலகிருஷ்ணன்).

இவற்றை ஏன் உரைகாவியங்கள் என்று போற்றுகிறோம் என்றால் இவை ஒவ்வொன்றும் தமிழுக்குப் புதிய கற்பனைகளையும் நடைகளையும் சேர்ப்பதுதான். இந்தப் படைப்பாளிகளில் பலர் பெரும் காவியக் கவிஞர்களுக்கு ஈடானவர்களே. எடுத்துக்காட்டாக நெடுங்குருதி என்ற ஓர் ஒப்பற்ற காப்பியப் படைப்பு. ஒரே ஒரு ஒற்றை உவமையின் மூலம் புதினத்தின் கருப்பொருளையும் மானிட வாழ்வின் எதார்த்தத்தையும் சித்திரமாக்குகிறது:

வாழ்வின் இரக்கமற்ற கைகளோடு எதிர் அமர்ந்து பகடையை உருட்டவும், அதை வென்று கெக்கலிக்கவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் எப்போதும்போல முடிவில் வாழ்வு வெற்றிலையை மடித்து வாயிலிட்டு ருசிப்பதுபோல வெகு சாதாரணமாக யாவரது வாழ்க்கைக் கணக்கையும் முடித்துக்கொண்டு உதட்டில் சிவப்புச் சாறு வழிய நடந்து போய்விடுகிறது.

சற்று யோசித்துப் பாருங்கள். இந்த உவமை ஒரு காப்பிய உவமைக்கு இணையாக இருக்கிறதல்லவா? வாழ்வோடு மனிதன் எதிர் எதிராக அமர்ந்து கொண்டு பகடையாடிக் கொண்டிருக்கிறானாம். இறுதியில் வாழ்க்கை மனிதனை வெற்றிலை போல் சுருட்டி சவைத்துவிட்டு உதட்டில் சிகப்புச் சாறு வழிய நடந்து செல்கிறதாம். என்ன ஒரு பிருமாண்டமான கற்பனை. பாற்கடலை அருந்த அதன் கரையில் ஒரு பூனையைப் போல் அமர்ந்திருந்த கம்பனின் கற்பனைக்கு ஈடான கற்பனை அல்லவா இது!

சென்ற நூறாண்டுகளில் தமிழில் நிகழ்ந்த மகத்தான இலக்கிய முயற்சி என அசோகமித்திரனால் பாரட்டப்பட்ட விஷ்ணுபுரம் உண்மையிலேயே ஓர் உரைநடைக் காவியம்தான். ஒருபுறம் வரலாற்றையும் மறுபுறம் தத்துவத்தையும் இருபெரும் சிறகுகளாகக் கொண்டு எழுந்து பறந்து வரும் இந்தக் காவியப் படைப்பு தமிழுக்குக் கிடைத்துள்ள  வரப்பிரசாதமே. இந்த உரை காவியத்தில் ஒரு வருணனை:

தலைக்கு மேல் மகத்தான அலட்சியத்துடன்

பெருவெளி மல்லாந்து கிடக்கிறது.

கொஞ்சம் நின்று நிதானித்துச் சிந்தித்துப் பாருங்கள்.. கிறுகிறுக்க வைக்கும் கற்பனை.

இப்படி உரைநடையிலேயே கவிதையின் பேரழகை எல்லாம் கொண்டு குவிக்கும் இந்த எழுத்து விற்பன்னர்களின் முன் கவிதையில் எழுதப்பட்ட காவியங்கள் எடுபடவில்லை. காவியங்கள் எழுந்தன ஆனால் அவை பெருங்காப்பியங்களாக மலரவில்லை. நீண்ட பாடல்களாக நின்றுவிட்டன. கற்பனை ஆறுகளாகப் பெருக்கெடுத்து ஓடாமல் கான்கிரீட் ஓடைகளாகப் போய்விட்டன.

உரைநடையில் இந்த மயக்கும் மந்திரவாதிகள் என்னவெல்லாம் சித்துவிளையாட்டுகளை ஆடினார்களோ அதை கவிதையில் கொண்டுவருவது சாத்தியமில்லை. இருந்தாலும் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் முயன்று பார்க்கும் முனைப்புடன்கூட இதுவரை தமிழில் காவியங்கள் எதுவும் எழுதப்படவில்லை.

ஜேஆர்

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் காவிய இலக்கியங்களின் வளர்ச்சி

காப்பியம் என்ற இலக்கிய வடிவம் செத்துவிட்டது என்று ஒருபுறமும் பழங்கால காப்பியம் என்பதுதான் தற்காலத்தில் மாபெரும் புதினங்களாகத் தோன்றுகின்றன என்று மறுபுறமும் வாதங்கள் நடைபெற்றாலும்  இரண்டு வாதங்களும் பிழையானவையே. புதினம் என்ற ஓர் இலக்கிய வடிவம் காப்பியம் என்று இலக்கிய வடிவத்தைப் பதிலீடு செய்யாது, செய்ய முடியாது என்பதையும் அவை இரண்டும் வெவ்வேறு இலக்கிய வடிவங்கள் என்பதையும் முன்னர் கண்டோம். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மட்டும் 2025 ஆம் ஆண்டு வரை பல்வேறு மொழிகளில்  பதின்மூன்றுக்கும் மேற்பட்ட காவியங்கள் தோன்றிவிட்டன என்பதை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இவை அனைத்துமே கவிதை வடிவில் எழுதப்பட்ட காவியங்கள் அல்லவென்றாலும் கீழ்க்காணும் பத்து படைப்புகளைக் கவிதை வடிவில் எழுதப்பட்ட காவிய இலக்கியங்கள் என்று ஒப்புக்கொள்ளலாம்:

  1. ஸ்ரீபார்கவராகவீயம், ஜகத்குரு ராம்பத்ராச்சாரியார், வடமொழி, 2002
  2. லைம்ஸ்டோன்: அன் எப்பிக் போயம் ஆஃப் பார்படோஸ்– அந்தனி கெல்மன், ஆங்கிலம், 2008
  3. அஷ்தவக்ரா, ஜகத்குரு ராம்பத்ராச்சாரியார், இந்தி, 2009
  4. கீதராமாயணம், ஜகத்குரு ராம்பத்ராச்சாரியார், வடமொழி, 2010
  5. தி லோவிஸ் டிரைலஜி, ஆனி வால்ட்மன், ஆங்கிலம், 2011
  6. பிராண்ட் நியூ ஏன்சியன்ட்ஸ், கே டெம்பஸ்ட், ஆங்கிலம், 2013
  7. அப்போகேலிப்ஸ், பிரட்ரிக் டர்னர், ஆங்கிலம், 2016
  8. விரத நெப்போ விரத, போரிஸ் நோவிக், ஸ்லோவிக், 2017
  9. எப்போக்: எ பொயட்டிக் சை-பி சாகா, தேவ் ஜில்க், ஆங்கிலம், 2024
  10. எப்போக்: 1517. மிஷேலும் டயனாவும், ஸ்டானிஸ்லேவ் செர்னிஷெவிச், ரஷ்யமொழி, 2025

இவற்றைப் பற்றிய திறனாய்வுக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. மிஷேலும் டயனாவும் என்ற ரஷ்யக் காவியம் ஐரோப்பியமொழிக் காவியங்களில் மிக நீளமானது என்றும் மிக நுட்பமான மொழியியல் சிறப்பு வாய்ந்தது என்றும் புகழப்படுகிறது. ஆங்கிலத்தில் தற்போது எழுதப்படும் சில காவியங்கள் அறிவியல் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் காவிய முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். தமிழில் இருபதாம் நூற்றாண்டில் அதிக அளவில் காவிய முயற்சிகள் நடைபெற்றன. இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் பல காண்டங்களைக் கொண்ட பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமனின் சேதுகாப்பியம் போன்ற சில முயற்சிகள் நடைபெற்றன. இப்போதும் நடைபெற்று வரலாம். ஒரு மகா காவியத்தைப் படைக்க குறைந்தபட்சம் இருபது ஆண்டுகள் வரை தேவைப்படலாம்.

தமிழில் புதினங்கள், சிறுகதைகள் போன்ற நவீன  வடிவங்களைத் தவிர்த்து கவிதை சார்ந்த புதிய படைப்புகளையும் முயற்சிகளையும் பற்றி இணைய வழியில் குறைந்த அளவிலேயே அறிந்துகொள்ள முடிகிறது. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அத்தகைய முயற்சிகள் அரிதாகவே உள்ளன. அதற்கான ஆக்கமும் ஊக்கமும் இல்லை என்பது எதிர்பார்க்கக்கூடிய எதார்த்தமே.

ஜே.ஆர்

புதினமும் காவியமும் ஒன்றாகுமா?

தமிழில் ஏன் தற்போது மகாகாவியங்கள் எதுவும் தோன்றுவதில்லை என்று கேட்டால் காவியங்களுக்கு பதிலாகத்தான் இப்போது பெரும்பெரும் புதினங்கள் எழுதப்படுகின்றன என்று கூறப்படுகிறது. உலக இலக்கிய அரங்கிலும் இதே பதில்தான்.

ஆங்கிலத்தில் லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும், கேப்ரியேல் கார்சியா மார்க்கஸின் ஓராயிரம் ஆண்டு தனிமை, ஜே ஆர் ஆர் தொல்கீயனின் லார்டு ஆஃப் த ரிங்க்ஸ், ஜேம்ஸ் ஜாய்சின் யுலிசஸ், விக்டர் ஹியூகோவின் லெஸ் மிசரபிள் போன்ற பெரும் பட்டியல் காட்டப்பட்டு இவை எல்லாம் காப்பியங்களுக்கு நிகரானவை என்று கூறப்படுகிறது.

தமிழிலும் ஜெயமோகனின் விஷ்ணுபுரம், எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, எம்.கோபாலகிருஷ்ணனின் மணற்கடிகை, கல்கியின் பொன்னியின் செல்வன் ஆகிய மாபெரும் நாவல்கள் காவியங்களுக்கு இணையானவை என்று எடுத்துரைக்கப் படுகிறது.

உண்மையில் இவை எல்லாம் பிரமாண்டமான படைப்புகள்தான். காப்பியங்களை வெல்லக்கூடிய தகுதி  படைத்தவைகள்தான். ஆனால் எத்தகைய மகத்துவமான படைப்புகளாக இருந்தாலும் புதினம் புதினமே. காவியம் காவியமே. புதினம் என்ற இலக்கிய வடிவமும் காவியம் என்ற இலக்கிய வடிவமும் வெவ்வேறானவை.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதற்கொண்டே புதினம் என்ற தனிவடிவம் தோன்றி மெதுவாக வளர்ந்து பின்னர் முதன்மை இலக்கிய வடிவமாகி செழித்தோங்கியது. காப்பியங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தோன்றின. அதுவும் மகா காவியங்கள் எனப்படுபவை மிகக் குறைவே. ஆங்கிலத்தில் இழந்த சொர்க்கம் மட்டுமே பெருங்காப்பிய நிலையைப் பெற்றது. தமிழில்கூட மகாகாவியங்கள் என்றால் அவை சிலப்பதிகாரமும் கம்பராமாயணமும் மட்டுமே.

காப்பியமும் புதினமும் வெவ்வேறானவை. காப்பியம் கவிதை நடையில் இருக்கும். புதினம் உரைநடையில் எழுதப்படும். கவிதை நடைப் புதினங்கள் நடை வேறுபாடே தவிர புதிய இலக்கிய வடிவம் அல்ல.

ஒரு மாபெரும் புதினத்தோடு ஒரு மகாகாவியத்தை எப்படி ஒப்பிட முடியாதோ அது போல ஒரு மகாகாவியத்தோடு ஒரு மாபெரும் புதினத்தையும் ஒப்பிட முடியாது.

அந்தந்த வடிவங்கள் அதுஅதற்கென கருத்து நுட்பங்களையும், வடிவ அமைப்புகளையும், தனித்த நோக்குகளையும், மொழிநடைகளையும், கதைப்பின்னல்களையும், பாத்திரப் படைப்புகளையும் கொண்டவை.

ஒரு மாபெரும் புதினம் எத்தகைய பாடுபொருளையும் தன் தனித்துவமான நோக்கிற்கேற்ப குழைத்து வடிக்கும் திறன்பெற்றது. உரைநடை வடிவம் வழங்கும் நெகிழ்வைப் பயன்படுத்தி கற்பனை ஆற்றலை எதார்த்தத்துடன் இணைக்கும் வல்லமை கொண்டது. கவிதை நடையில் எழுதப்படும் காவியத்துக்கு இந்தச் சுதந்திரம் இல்லை.

உள்ளதை உள்ளபடி விவரிக்கும் திறன் உரைநடைக்கே உண்டு. இதனால் காவியம் படிமங்களையும், உவமைகளையும், உருவகங்களையும், மௌனங்களையும், இடைவெளிகளையும், குறிப்புகளையும், யூகங்களையும் இன்ன பிற செய்யுள் நுட்பங்களையும் பயன்படுத்துவதால் அதன் அழகும், நடையும், உய்த்துணர வைக்கும் ஆற்றலும் காவியத்தை உன்னதமாக்குகிறது. இதனால் கவித்துவமும், கற்பனை வளமும், ஆய்வு வேட்கையும் அற்ற ஒரு சாதாரண வாசகனால் காப்பியத்தின் ஆழத்தை அறிந்து உணர்ந்து சுவைக்க முடியாது. இதையே கவிதைச் சிகரத்தைத் தொட்டு உலாவிய மகா கவிஞரான பாரதி,

அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும்

ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்

என்று அழகுறப் பாடினார்.

சதிராடும் சந்தங்களையும், சிலிர்ப்பூட்டும் ஓசை நயங்களையும், மயக்கவைக்கும் மொழிநுட்பங்களையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு ஒரு மகாகாவியம் கற்பனை வீதியில் ஒரு கந்தர்வ ராணியைப் போல் எழிலாக நடைபயில்கிறது.

புதினத்தைத் தனியாக நடந்து செல்லும் ஒரு பெண்ணுக்கு ஒப்பிட்டால், எழில்பொங்கும் தோழியர் புடைசூழச் செல்லும் ஓர் அலங்காரப் பதுமையாம் இளமைமிகும் கன்னியான இளவரசியைப்போல செல்வதாக ஒரு மகாகாவியதை வருணிக்கலாம்.

உரைநடைப் புதினம் எதார்த்தத்தை அப்படியே ஓவியமாக்குகிறது. ஒரு தேர்ந்த படைப்பாளி தன் நோக்கத்தையும் கொண்ட கொள்கையையும் வெளிப்படையாகத் தன் படைப்பில் கூறுவதில்லை. பாத்திரங்களின் வாயிலாக மறைமுகமாக பதிவுசெய்கிறான். இதுவே அவனது புதினத்தை மாபெரும் படைப்பாக மாற்றுகிறது. புதினத்தைப் பிரச்சாரக் கருவியாக மாற்றினால் அந்தப் படைப்பு தன் கலை நயத்தை இழந்து போகும்.

ஆனால் மாபெரும் காவியம் நன்மைக்கும் தீமைக்கும் நடுவில் நடக்கும் இடையறாத போரைப் பாடுகிறது. தன் நோக்கத்தை முதலிலேயே பிரகடனப் படுத்துகிறது.

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்

என்ற தன் முப்பெரும் முழக்கத்தோடு தொடங்கி அவை நிகழ்வுற்று முடிவதை காப்பியப் போக்கில் காட்டுகிறது நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற மகாகாவியம்.

பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுவர் என்ற மெய்ப்பொருளை தன் காவியத்தின் மூலம் நிறுவிக் காட்டுகிறான் கம்பன் என்னும் காவியக் கவிஞன்.

னிதனின் ஆதி மீறலையும்

மரணத்து டன்நம் துயரங்களை

மண்ணில் கொணர்ந்த தடைபெற்ற

மரத்தின்  மரணச்சுவை கொண்ட

கனியைப் பற்றியும் மாபெரிய

 மனிதர்  நம்மை மீட்டெடுத்து 

திரும்பவும் அளித்தப் பேரின்ப

நிலைவரைப் பாடுக  கவிதேவே!

(இழந்தசொர்க்கம்,  தமிழாக்கம் பென்செருபாபேல்)

என்று முதல் சில வரிகளிலேயே தன் காப்பிய நோக்கத்தைக் கூறிவிட்டு மில்ட்டன் தன் மகாகாவியத்தைப் பாடுகிறான்.

புதினம் இப்படித்  தன்  நோக்கங்களை வெளிப்படையாகப் பிரகடனப் படுத்திவிட்டு அதற்கேற்ப செல்வதில்லை. உள்ளதை உள்ளபடி உரைக்கிறது .மீதியை வாசகனிடத்தில் விட்டுவிடுகிறது. பிரச்சார நெடி அடித்தால் அந்தப் புதினம் செத்துவிட்டது என்று அர்த்தம்.

புதினம் வாசகர்களுக்கானது. காவியம் தலைவர்களுக்கானது. புதினம் வாசிக்க வைக்கும், காவியம் யோசிக்க வைக்கும்.

ஜேஆர் டேவிட்சன்

வைரமுத்து – வாழும்போதே வைரமானவன்

‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று மகாகவிஞர்களுக்கு எல்லாம் மகாகவியான பாரதியால் போற்றப்பட்ட நம் தாய்த்திருநாடு இன்னும் உலக உச்சமாம் நோபல் பரிசை வெல்லவில்லையே என்ற ஏக்கம் தமிழ் மேல் காதல் கொண்ட அனைவருக்குமே உண்டு!

ஆனால் ஓரளவுக்கு ஆறுதல் தரும் விதமாக ஒருமுறை அகிலனும் (1975) மறுமுறை ஜெயகாந்தனும் (2002) இம்முறை வைரமுத்துவும் (2026) குறைந்தபட்சம் இந்திய உச்சத்தைத் தொட்டு தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

மொழி அழகு – செந்தமிழாயின்

அதுவன்றோ அழகு

என்று ’எல்லா மொழியும் அழகுதான், தாய்மொழியோ கூடுதல் அழகு’ என மொழி குறித்தப் பார்வையில் தன் பரந்த நோக்கைப் பதிவுசெய்த கவிப்பேரரசு இந்தியா வழங்கிய இந்த விருதை ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கும் பொருத்தமாக அர்ப்பணித்து தமிழ் அன்னையின் மீது பன்னீர் தெளித்து அவளது மனதைக் குளிர்வித்து அவளது பூமுகத்தில் புன்சிரிப்பைத் தவழவிட்டிருக்கிறார்.

கவிப்பேரரசு ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு வரிக்கும் வர்ணமேற்றும் வல்லமை கொண்டவர். மேற்கோளாகக் காட்டக்கூடிய ஆயிரக் கணக்கான கவிதை வரிகளைப் பெற்றெடுத்தவர். வாழும்போதே தன் வரலாற்றை எழுதிக்கொண்டே செல்லும் வரம் பெற்றவர். அதனால்தான் ஒரு கவிஞர் இப்படிப் பாராட்டுகிறார்:

கற்கும்போதே கல்வியானவன்!

வாழும்போதே வைரமானவன்!

மாணவராகக் கல்லூரியில் படிக்கும் போதே அவரது கவிதை நூல் பாடமாக வைக்கப்பட்ட வியப்பான வரலாற்றைதான் ஒரு கவிஞன் இப்படிப் பாடுகிறான்!

தமிழ்ச் சமுதாயத்தின் ஒற்றுமை அற்ற சீர்குலைவைக் கண்டு கவிஞர் மனம் வெம்பிப் பாடுகிறார்:

மத சாதியால் பிரிந்துவிட்டோம்! – மனம்

அதைச் சகதியால் நிரப்பி விட்டோம்!

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற (குறள் 34) என்ற வள்ளுவரின் வாய்ப்பாட்டையே இதற்குத் தீர்வாகக் கவிஞர் வலியுறுத்துகிறார்.

மனம் அழகு – எனின்

யாவும் பேரழகு!

இவரது சிந்தனைகள் அறிவுநலம் அளிப்பதாகவும் முருகியல் இன்பம் ஊட்டுவதாகவும் பிரமிப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்: பின்வரும் கவிதை இதற்கு ஒரு சான்று:

மண்ணின் பொறுமைதான்

மலை

கரியின் பொறுமைதான்

வைரம்

தாயின் பொறுமைதான்

நீ

திகைக்கவைக்கும் சிந்தனை! தித்திக்கும் கருத்து! கவிப்பேரரசு வைரமுத்தே! தமிழின் பெருமைதான் நீ!

எளிய வார்த்தைகளாலும் வரிகளாலும் அரிய உண்மைகளை எளிமையாகக் கூறும் பேராற்றல் பெற்றவர் கவிப்பேரரசு வைரமுத்து!

இந்த பூமி

சிரிப்பவர் சொர்க்கம்

அழுபவர் கல்லறை!

இந்த உலகைப் பற்றிய உண்மையை எவ்வளவு எளிமையாகக் கூறிவிட்டார். மயக்கும் தத்துவத்தை இனிக்கும் தமிழில் எடுத்து ஊட்டுகிறார்! அற்புதம் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டே வைரமுத்துவின் கவிதை வரிகள்தான் போலும்!

இந்தியாவின் அரியபெரிய விருதைத் தமிழ் அன்னைக்கு வாங்கிக் கொடுத்த கவிஞனே! தமிழ் உணர்வுமிக்க நெஞ்சங்கள் அனைத்தும் உன்னை உச்சிமுகர்ந்து வாழ்த்துகிறது.

இன்னும் ஏராளமான காலம் இருக்கிறது. அடுத்த பெரும் விருதை அன்னைத் தமிழுக்கு கொண்டுவந்து சேர். உலகளாவிய பாடுபொருளை வரித்துக்கொள்! உன்னத காவியங்களைப் பாடு! வாழ்த்துகிறோம்!

முனைவர் ஜேஆர்

பண்டைய காவியங்கள்தான் இன்றைய புதினங்களா?

இன்று காவியங்கள் பெரும்பாலும் தோன்றுவதில்லை. இதற்குக் காரணம் காப்பியம் என்ற இலக்கிய வடிவம்தான் இன்று புதினங்களாக மறுவடிவம் பெற்றுள்ளன என்று திறனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

முற்காலத்தில் உரைநடை வடிவில் புதினங்கள் எழுதப்பட்டனவா? கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் கிரேக்க எழுத்தாளர் லாங்கஸ், டேஃப்னிஸும் குளோவும் (Daphnis and Chloe – Longus) என்ற காதல் கதையை எழுதினார். உரைநடையில் எழுதப்பட்ட இது புதினம் என்ற இலக்கிய வடிவத்துக்கு அடித்தளம் இட்டது எனலாம். கி.பி. 1020 ஆம் ஆண்டில் ஜப்பானிய மொழியில் முராசகி சிக்கிபு (Murasaki Shikibu) எழுதிய 54 அத்தியாயங்கள் கொண்ட கெஞ்சியின் கதைதான் (The Tale of Genji) முதல் புதினம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தமிழிலும் உரை, உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் போன்ற உரைநடை இலக்கியங்கள் குறித்த குறிப்புகள் உள்ளன. எனவே காப்பியம் என்ற வடிவம்தான் உரைநடையில் எழுதப்படும் புதினமாக வளர்ச்சிபெற்றது என்று கூறுவது பொருத்தமானதாகத் தெரியவில்லை. புதினம் என்ற இலக்கிய வடிவம் தனியாகப் பரிணாம வளர்ச்சி பெற்று வந்தது என்றுதான் கூறவேண்டும்.

ஒடிசி, மகாபாரதம் போன்ற பண்டைய காப்பியங்கள் அக்காலத்தின் பிரபஞ்சவியல், அறவியல், வீரயுக ஒழுக்கம்  போன்றவற்றைப் பதிவுசெய்தது போல இக்கால புதினங்கள் இந்தக் காலத்தின் உளவியல், சமூகவியல், தத்துவப் பின்புலங்களைப் பிரதிபலிக்கின்றன. இது பொதுவாக இலக்கியங்களின் நோக்கும் போக்கும் என்பதால் காவியமே புதினமாக வளர்ச்சியுற்றது என்ற வாதத்துக்கு அரண் சேர்க்காது.

பண்டைய காப்பியங்கள் கடவுள்கள், அரக்கர்கள், இராக்கத விலங்குகள். போர்கள் போன்றவற்றை வருணித்தன. அதுபோல இக்காலப் புதினங்கள் தனிநபர் ஒழுக்கம், சமூகத்தில் அந்நியமாதல், சிக்கலான அமைப்புகளுக்கு எதிரான தனிமனிதனின் போராட்டம் ஆகியவற்றைப் பதிவுசெய்கின்றன. இது மேலை நாட்டு அல்லது வட்மொழி காப்பியங்களின் அடிப்படையில் கூறப்படுகிறது. தமிழில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே எழுந்த சிலப்பதிகாரம் என்ற மாபெரும் காப்பியம் இன்றைய புதினங்களின் பாடுபொருளையும் சாதாரண சாமானியர்களையும் பாத்திரங்களாகக் கொண்ட காப்பியம் ஆகும். ஆகவே காப்பியம் என்றாலே கடவுள்களையும், அரக்கர்களையும், போர்களையும் பற்றியது என்பது உண்மை அல்ல.

கவிதை நடையில் எழுதப்படவில்லை என்றாலும் சில நவீன புதினங்கள், பெரும் தலைமுறைகளையும், கலாச்சாரங்களையும், வரலாற்று யுகங்களையும் பற்றி பல தொகுதிகள் கொண்ட காவியத்துக்கு நிகரான படைப்புகளாக வெளிவந்துள்ளன. இருந்தாலும் இவற்றினால் மட்டுமே அவற்றைக் காப்பியங்கள் என்று கூறமுடியாது.

இன்றைய உலகின் பிளவுபட்ட, சந்தேகங்கள் நிறைந்த, பன்முகத்தன்மை கொண்ட இயல்புக்கு மிகவும் பொருத்தமான இலக்கிய வடிவமாகப் புதினங்கள் கருதப்படுகின்றன. மனித இருப்பின் பொருள் என்ன என்பதை விளக்கும் ஒரு சமகால உரையாகவும் அது செயல்படுகிறது. இப்படிப்பட்ட சிக்கலான கருப்பொருளை உரைநடையைப் போலவே கையாளும் நவீன கவிதைகள் ஆயிரக்கணக்காக படைக்கப்படும்போது இவற்றைப் பாடுபொருளாகக் கொண்ட காவியங்கள் தோன்றும் சாத்தியக் கூறு இல்லாமல் இல்லை.

ஜேம்ஸ் ஜாய்ஸின் மாபெரும் படைப்பான ‘யுலிசிஸ்’ (Ulysses) ஹோமரின் காவியமான ஒடிசியின் (Odyssey) இதிகாசப் பரிமாணத்தைப் பிரதிபலிக்கிறது. ஆனால், கடல் அரக்கர்களுடன் சண்டையிடுவதற்குப் பதிலாக அதன் கதாநாயகன் டப்ளின் நகரத்தின் சாதாரண அன்றாட வாழ்க்கையை எதிர்கொண்டு நகர்கிறான். இது உண்மைதான் என்றாலும் குடிமக்களின் அன்றாட குடும்பப் பிரச்சினையையும் அதன் பின்விளைவுகளையும் காவியத்தாலும் கையாளமுடியும் என்பதற்குச் சிலப்பதிகாரமே சான்றாகும்.

லாரி மெக்மர்ட்ரியின் ‘லோன்சம் டவ்’ (Lonesome Dove) அல்லது ரொபர்ட்டோ பொலான்யோவின் ‘2666’ போன்ற புதினங்கள் அவற்றின் பரந்த களங்கள், விரிவான கதைக்களங்கள் மற்றும் ஆழமான கருப்பொருள் ஆகியவற்றின் காரணமாக நவீன காப்பியங்களாகத் திறனாய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மரபுச் செய்யுள் வடிவிலான காப்பியங்கள் பொதுவாக இப்போது ஒரு முக்கிய சமூகக் கலாச்சார ஆற்றலாக இல்லை. இருந்தாலும் ஒரு பண்பாட்டின் அடையாளம், போராட்டங்கள், விழுமியங்களை வரையறுத்து பாதுகாக்கும் காப்பியத்தின் வரலாற்றுப் பொறுப்பைப் புதினம் வெற்றிகரமாகத் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது. காப்பியங்களைப் போன்றும் அதைவிட பிருமாண்டதுமான பல புதினங்கள் தோன்றியவண்ணம் உள்ளன. அதேநேரத்தில் அதிக எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும் இன்றைய யுகத்திலும் காவியங்கள் தோன்றாமல் இல்லை.

இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இதுவரை உலக அளவில் பதின்மூன்றுக்கும் மேற்பட்ட காப்பியங்கள் வெளிவந்துள்ளன என்பதும் குறிப்பாக ஸ்டானிஸ்லாவ் செர்னிஷெவிச்சால் (Stanislav Chernyshevich) 2025 ஆம் ஆண்டில் ருஷ்ய மொழியில் எழுதப்பட்ட நீண்ட காவியமான 1517. மிச்சேலும் டயானாவும் (1517. Michelle and Diana)  என்ற காப்பியம் வெளிவந்துள்ளது என்பதும் காவியமும் உரைநடைப் புதினமும் தனித்தனி இலக்கிய வடிவங்கள் என்பதை நிரூபிக்கின்றன. ஒன்றையொன்று பதிலீடு செய்ய முடியாது. பண்டைய காலங்களிலும் மகா காவியங்கள் ஒரு சிலவே எழுந்துள்ளன. எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரம் என்ற மகாகாவியம் எழுந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே கம்பராமாயணம் என்ற மாபெரும் காப்பியம் எழுந்தது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகட்கு ஒரு முறையே மகா காவியங்கள் தோன்றுகின்றன என்பதை வைத்துப் பார்க்கும் போது எதிர்காலத்தில் மகாகவியங்கள் நிச்சயமாகத் தோன்றும். காப்பியம் என்பது வழக்கிழந்த வடிவம் அல்ல. காப்பியத்தின் இடத்தைப் புதினத்தால் ஒருக்காலும் இட்டுநிரப்ப முடியாது.

முனைவர் ஜேஆர்

காப்பியம் என்ற கலைவடிவம் இப்போது செத்துவிட்டது – ஆர்.ஜே.ரீஸ்

ஆர்.ஜே.ரீஸ் தம்முடைய அயலக மாணவர்களுக்கான ஆங்கில இலக்கியம் – ஓர் அறிமுகம் என்ற நூலில் காவியம் என்ற கலைவடிவம் இப்போது செத்துப்போய்விட்டது என்று கூறுகிறார். இந்தக் கடுமையான கூற்றை நியாயப் படுத்த அடுக்கடுக்கான வாதங்களை வைக்கிறார்.

நவீன எழுத்தார்கள் எவரும் இந்த வடிவத்தை இன்று பயன்படுத்துவதில்லை என்பது அவரது முதல் வாதம்.

ஆனால் அதற்காகப் பண்டையக் காவியங்களான இலியடையும் ஒடிசியையும், ஏனிடையும் டிவைன் காமெடியையும் இன்று யாரும் படித்துச் சுவைப்பதில்லை என்பது இதற்கு அர்த்தமல்ல; சிலராவது படிக்கிறார்கள் என்றாலும் பெரும்பாலான மக்கள் படிப்பதில்லை; கல்வி அரங்குக்குள் மட்டுமே அவை சுருண்டு படுத்துக்கொண்டு விட்டன என்று குறிப்பிடுகிறார்.

தற்கால இலக்கியத்தில் காப்பியம் என்பது ஓர் உயிரிழந்த கலைப்பொருள். வளர்ச்சி அடையாத வடிவம்.

பெரும்பாலும் காவியங்கள் கடவுள்கள் அல்லது மாபெரும் வீரர்களைப் பற்றிய வரலாற்று அல்லது புராணப் பாடுபொருட்களையே விதந்தோதுகின்றன. மரபு வழிக் காப்பியங்கள் போற்றும் இந்த மாபெரும் வீரர்கள் தங்கள் நாட்டுக் கலாச்சாரங்கள் மூலம் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். அக்கில்லஸ், அகமெம்னான், ஹெக்டர், ஒடீசியஸ் ஆகியோர் உயரிய கிரேக்கக் கலாச்சாரத்தின் அடையாளங்கள். இராமன், யுதிஷ்டிரர் ஆகியோர் ஆரியக் கலாச்சாரத்தின் அடையாளங்கள்.

ஆனால் தற்காலம் ஒரு வீர யுகம் அல்ல. உன்னதம், பிரமாண்டம் ஆகியவை உலர்ந்து காய்ந்து போய்விட்டன. அதனால் இன்றைய உலகில் ஓர் படைப்பாளி ஒரு காவியத் தலைவனை முன்னிலைப் படுத்துவது  காலத்திற்கு ஒவ்வாதது .ஆகும்.

டி. எஸ். எலியட் தன் பாழ்நிலம் (The Waste Land) என்ற கவிதையிலும், தாமஸ் மான் தன் மந்திர மலை (The Magic Mountain) என்ற புதினத்திலும் போருக்குப் பிந்திய நவீன உலகில் வீரம், தெய்வீகம், காதல் போன்ற அனைத்து உன்னதப் பண்புகளின் மரணத்தை பற்றிப் பாடியுள்ளனர்; ஆன்மீக வறட்சியும் உணர்ச்சியற்ற வறண்ட நிலையும் கொண்ட, துண்டு துண்டாய் உடைந்த நரகத்தைப் போன்ற, சாரமற்ற ஒரு சூழலாகவே அவர்கள் இந்த நவீன உலகைச் சித்தரித்துள்ளனர். இது முற்றிலும் உண்மையானதாகவே தோன்றுகிறது. இப்படிப்பட்ட உலகில் பழங்காவியங்கள் போற்றும் உன்னதங்கள் படிப்போருக்கு வெறுப்பூட்டும்.

நவீன வசகர்கள் இத்தகைய வீரர்களுடனும் இலக்கிய வடிவங்களுடனும் இணைத்து தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது.

காவியத் தலைவன் இல்லாத காவியத்தையோ வீரம் பற்றிய செய்தி இல்லாமல் ஒரு காவியத்தையோ பாட முடியாது. ஆகவே நவீன இலக்கிய உலகில் காவியத்துக்கு இடமில்லை.

நவீன காலம் கலைகள் விடுதலை பெற்று சுதந்திரமாக உலாவும் காலம் ஆகும். நவீன எழுத்தாளர்கள் மரபுக்கு அடிமையானவர்கள் அல்லர். நவீன இலக்கியம் வடிவத்திலும் உத்தியிலும் நொடிக்கு நொடி மாறிவருகிறது. யுகங்களுக்கு முற்பட்ட வடிவங்களுக்கும் மரபுகளுக்கும் ஒரு காவியக் கவிஞன் இணங்கிப் போக வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு காவியப் புலவன் முதலில் கடவுளையோ கலைதெய்வத்தையோ போற்றி வணங்க வேண்டும். ஒரு காவியக் கவிஞன் ஹோமரின் உவமைகளைப் பயன்படுத்த வேண்டும். ஒரு மரணம் அடைந்த வீரனின் நினைவஞ்சலியாக அல்லது ஒரு மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் விதமாக வீரவிளையாட்டுகள் காவியத்தில் இடம்பெற வேண்டும். காவியம் செயலோட்டத்தின் நடுவில் இருந்து தொடங்க வேண்டும்.  இந்த நிபந்தனைகள் கலை சுதந்திரத்திற்குக் குறுக்கீடுகள் ஆகும். இந்தக் காரணங்களால் ஒரு காப்பியத்தை எழுதும் உத்வேகமோ அல்லது படிக்கும் ஆர்வமோ இந்த நூற்றாண்டில் எழ வாய்ப்பே இல்லை.

இன்றைய உலகம் அதி வேகமாக ஓடுவதால் மனித வாழ்க்கை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகிறது. பொருளியல் நெருக்கடி உச்சத்தில் உள்ளது. மின்னணு ஊடகத்தின் படுபயங்கர வளர்ச்சியால் மானிட வாழ்க்கை தாக்கத்திற்கு உள்ளாகிறது. பழங்கால கிரேக்க சமூகத்திலும், எலிசபெத் அரசியின் காலத்து இங்கிலாந்திலும் வாழ்ந்த மக்களுக்கு இலியட், தேவதை ராணி போன்ற இலக்கியங்களைக் கற்று மகிழ நேரமும் ஆர்வமும் இருந்தன.

தற்கால மனிதனின் வாழ்க்கை மிகவும் மாறிவிட்டது. காவியங்களைப் படிக்க அவனுக்கு நேரமில்லை. இவையே தற்காலத்தில் காவிய வடிவத்தின் மரணத்திற்கு வழிகோலின.

தற்கால இலக்கியத்தில் காவியம் எழுதுவது சாத்தியமற்றது. ஏனெனில் ஏராளமான இலக்கியக் கொள்கைகள் தோன்றி விட்டன. அவை காப்பியம் என்ற இலக்கிய வடிவத்துக்கு துணைபோவதில்லை. நவீன காலத்தில் புதுப்புது இலக்கியக் கொள்கைகள் மலர்ந்து செழிக்கின்றன. பெர்டினாண்ட் டி சோசர் (Ferdinand de Saussure) ஜாக் தெரிதா (Jacques Derrida), ரோலண்ட் பார்த் (Roland Barthes), ஸ்டான்லி ஃபிஷ் (Stanley Fish), பியர் மாகரே (Pierre Macherey) ஆகியோரின் வருகையோடு இணந்து பல நுட்பமான கொள்கைகளும் தோன்றிவிட்டன. அமைப்புடைப்பு (Deconstruction), வாசகர் மையக் கோட்பாடு (Reader Response)[1], இன்மைக்கோட்பாடு (Theory of Absence) ஆகிய கோட்பாடுகள் ஒரு குறிப்பிட்ட உரை அல்லது பிரதி ஓரளவாவது அறிந்துகொள்ளக்கூடிய தெளிவான பொருளைக் கொண்டது என்ற விமரிசன நிலைப்பாட்டின் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளன. படைப்பாளியின் மரணத்தை இந்தக் கொள்கைகள் பிரகடனப்படுத்தின. எனவே ஆசிரியரின் நோக்கங்களும் அவர் சொல்ல வந்த செய்திகளும் முக்கியம் இழந்து போகின்றன. அதுமட்டுமல்லாமல் பொருளின் பொருண்மை நிலையற்றது (differed/deferred) என்ற தெரிதாவின் இறுதி வாதத்தினையும், பொருள் என்பது பிரதிக்குள் இல்லை, அதற்கு வெளியேயுள்ள இன்மைகளில்தான் (absences) இருக்கிறது என்ற மாகரேயின் கருத்தினையும் தொடர்ந்து, பொருள் என்ற கோட்பாடே முற்றிலும் தற்காலிகமானதாகவும் சார்புடையதாகவும் (contingent) மாறிவிட்டது. ஒரு பேரிலக்கியம் (காப்பியம்) ஓர் ஒருங்கிணைந்த செய்தியையும் பொருளையும் கொண்டிருக்க வேண்டும் என்பதால் சிதறுண்ட பலபொருள் சாத்தியங்களால் நிழலிடப்பட்டுள்ள சமகால இலக்கியத்தில் ஒரு பேரிலக்கியத்திற்கான இடம் என்பதே இல்லாது போய்விடுகிறது. உண்மையைக் கூறப்போனால் காப்பியம் என்னும் ஓர் பேரிலக்கியம் இப்போது இறந்துவிட்டது.

தொகுத்தளித்தவர்: முனைவர் ஜேஆர்


[1] வாசகர் மையக் கோட்பாடு (Reader Response) என்பது வாசிப்பை, வாசகருக்கும் பிரதிக்கும் இடையில் நிகழும் ஒரு துடிப்பான பரிமாற்றமாகப் பார்க்கும் ஓர் இலக்கியக் கோட்பாடு ஆகும். பிரதியின் பின்னே மறைந்திருக்கும் ஆசிரியரின் பொருளைத் தேடி அலைவதை விட்டுவிட்டு அந்தப் படைப்போடு உங்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட எதிர்வினைகள், சிந்தனைகள், உணர்வுபூர்வமான தொடர்புகள் ஆகியவற்றை ஆராய்ந்து விளக்கி நிலைநாட்டுகிறது இக்கோட்பாடு

காலந்தோறும் காவிய முயற்சி

Welcome to WordPress! This is your first post. Edit or delete it to take the first step in your blogging journey.

காலந்தோறும் காவிய முயற்சி

[2021 ஆம் நூற்றாண்டின் தமிழ் மகா காவியம் ஒன்று தன் வண்ணச் சிறகை விரித்துப் பறக்க எத்தனிக்கும் இந்த ஒளிமயமான ஆண்டில் இந்த வலைத்தளத்தில் காவியம் குறித்த ஒரு முன்னோட்டம் தொடர்ந்து வெளிவர உள்ளது. இந்தக் கட்டுரைகளைப் படிக்கும் வாசகர்கள் காவியம் குறித்தத் தங்கள் கண்ணோட்டங்களைப் பதிவுசெய்யலாம்]

கி.மு. 2100 ஆம் ஆண்டில் இருந்தே உலக இலக்கியங்களில் பெருங்காவியம் படைக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன எனலாம். அதற்கு முன் அவை வாய்மொழிக் காப்பியங்களாக வழங்கி வந்திருக்கலாம். ஏறத்தாழ 2100 ஆம் ஆண்டில் மெசொப்பொத்தேமியாவில்[1] களிமண் பலகைகளில் சுமேரிய மொழியில் எழுதப்பட்ட கில்காமேஷ் காவியம்தான் (Epic of Gilgamesh) உலகின் முதன்முதலில் எழுதப்பட்ட காவியம் என்று கருதப்படுகிறது. இது கி.மு. 1300 களில் பாபிலோனியப் பாடலாக முழுமையாகத் திருத்தி எழுதப்பெற்றது.

வாய்மொழிக் காப்பியங்களாக விளங்கிய கிரேக்கக் காப்பியங்களான ஹோமரின் இலியடும் ஒடிசியும் கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றும், வடமொழிக் காப்பியமான வால்மீகியின் இராமாயணமும், வியாசரின் மகாபாரதமும் கி.மு 5-4 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றும் கருதப்படுகின்றன. இவை காலத்தை வென்று தடம் பதித்தவை. இடைப்பட்டக் காலங்களில் பல காப்பியங்கள் தோன்றி மறைந்திருக்கலாம்.

தமிழிலும் காலந்தோறும் பல காப்பிய முயற்சிகள் நடந்தன. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுங் காப்பியங்கள் ஆகிய சொற்றொடர்கள் தமிழில் நடந்த எழுச்சிமிக்கக் காப்பிய முயற்சிகளுக்குச் சான்றாகும். தகடூர் யாத்திரை போன்ற பல காப்பியங்களின் பெயர்கள் மட்டுமே இன்றளவும் நின்று நிலவுகின்றன. 

 ஆனால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஓர் இளவரசனான இளங்கோவடிகள் குடிமக்களைப் பற்றிப் பாடிய சீர்மிகும் காப்பியமான சிலப்பதிகாரம் தோன்றியது. ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கால புதினத்தைப் போன்ற அமைப்புடன் ஒரு நவீன காவியத்தைப் பாடிய இளங்கோவடிகளின் அறிவுத் திறத்தைப் போற்றி மகிழாமல் இருக்க முடியாது. இதனால்தான் மகாகவி பாரதியார் “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்தத் தமிழ்நாடு” என்று விதந்தோதினார்.

அடுத்து ஓர் ஒப்புயர்வற்ற ஒளிமிகும் காப்பியத்தைப் பெற தமிழ் அன்னை ஆயிரம் ஆண்டுகள் தவம் கிடக்கவேண்டி இருந்தது. கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும் அவன் அழியா அழகுடைய இராம காவியத்தை உலகுக்குத் தந்ததும் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு. எந்த ஓர் உலக மகாகாவியத்துக்கும் சவாலாக நின்று கருத்திலும் கற்பனையிலும், மொழிநடையிலும் முருகியலிலும், உத்தியிலும் உன்னதத்திலும் உயர்ந்த வானைத் தொட்டவன் கம்பன். அடுத்து ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்னரும் அது போன்றதொரு மகத்துவம் தமிழில் படைக்கப்படவில்லை என்பது கால வெள்ளத்தைப் புலவர்களின் துணையுடன் நீந்திவந்துகொண்டிருக்கும் தமிழின் குறையல்ல தமிழர்களின் குறையே!

கி.மு. 2100 ஆம் ஆண்டில் தோன்றிய கில்காமேஷில் தொடங்கிய காப்பிய முயற்சி 2025 ஆண்டில் ஸ்டானிஸ்லாவ் செர்னிஷெவிச் எழுதிய 1517: மிச்சேலும் டயானாவும் என்ற பெரும் காப்பியம் வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலக மொழிகளில் இதுவரை படைக்கப்பட்ட காவியங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 372 ஆகும்.

காப்பியம் என்றால் மகத்துவம். காப்பியம் என்றால் உன்னதம். பிற இலக்கிய வகைகளால் தொட முடியாத சிகரத்தைத் தொடுவதுதான் அதன் இலக்கு. மனிதக் கற்பனையின் உச்சம். மனித அறிவின் கொடுமுடி. மனிதம் என்பதே அதன் கருப்பொருள். இதைச் சிந்தனை வானில் உலா வந்து கொண்டிருக்கும் பேரொளிச் சுடரான கம்பன் நான்கே வரிகளில் இப்படிச் சுருக்கி வகுக்கிறான்:

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால் (கம்ப. 84)[2]

இப்படிப்பட்ட ஓர் உலகம் தோன்ற வேண்டும் என்பதுதான் கம்பன் காவியத்தின். பெருங்கனவு. உலத்தில் தோன்றிய உன்னதக் காப்பியங்கள் அனைத்தின் அறப்பிழிவும் இதுதான். இது வேறொன்றும் இல்லை. சிந்தனைச் சிற்பி காரல் மார்க்ஸ் காணத்துடித்தப் பொதுமை உலகம்தான். விவிலியம் மாதிரியாகப் படைத்துக்காட்டிய ஈதண் தோட்டம்தான் (The Garden of Eden). மனித குலம் அடைய வேண்டும் என்று கவிஞர்கள் கனவுகண்ட சொர்க்க பூமிதான். இதுதான் காப்பியத்தின் ஒரே நோக்கமும் இலக்கும் ஆகும்.

மானிட சிந்தனையின் மகத்துவமானவைகளை மட்டுமே தலைசிறந்த காவியங்கள் மிகப் பிரமாண்டமாக எடுத்து இயம்புகின்றன இந்த நோக்கில் கற்பனை வளத்தாலும், கருத்துகளின் சிறப்பாலும் உலகில் இதுவரை தோன்றிய காப்பிய முயற்சிகளில் வானத்தின் உச்சியைத் தொட்ட வெகு சில ஈடு இணையற்ற காப்பியங்களை இப்படிப் பட்டியலிடலாம்:

  1. இலியட்/ஒடிசி: கிரேக்கம்,  ஹோமர்,   கி.மு 8 ஆம் நூற்றண்டு
  2. வால்மீகி இராமாயணம்/வியாசரின் மகாபாரதம்: வடமொழி. கி.மு. 5-7 ஆம் நூற்றாண்டு
  3. ஏனிட்: விர்ஜில், இத்தாலி, கி.மு 29-19
  4. சிலப்பதிகாரம்: இளங்கோவடிகள், தமிழ், கி.பி. 2 ஆம் நூற்றாண்டு
  5. கம்பராமாயணம்: கம்பர், தமிழ், கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
  6. இழந்த சொர்க்கம்: மில்ட்டன், ஆங்கிலம், 17 ஆம் நூற்றாண்டு (கி.பி.1667)

[அடுத்து வெளிவர இருக்கும் கட்டுரை ‘காவியமும் புதினமும் ஒன்றல்ல’. இரண்டும் வெவ்வேறு வடிவங்கள். காவியத்தைப் புதினத்தால் பதிலீடு செய்ய முடியாது. காவியம் உலகளாவியது. காவியம் என்பது கனவுகளின் தொகுப்பு. உன்னதங்களின் உலா. பட்டை தீட்டிய கருத்து வைரைங்களாலான பொற்சரம். படித்து ஆய்ந்து அறிவின்பம் பெறுவதற்கானது. படித்துப் பொழுது போக்கி உணர்வின்பம் மட்டுமே பெறுவதற்கானது அல்ல.]

[முனைவர் ஜேஆர்]


[1]மெசொப்பொத்தேமியா (Mesopotamia) என்பது தைகிரிசு மற்றும் யூபிரட்டீஸ் ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான நிலப்பரப்பைக் குறிக்கும். நவீன ஈராக், குவைத், துருக்கி, மற்றும் சிரியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்தப் பகுதி, உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது. சக்கரம், எழுத்து வடிவம், வேளாண்மை ஆகியவை இங்குதான் தோன்றின.

[2] இராமனின் கோசல நாட்டில் வறுமையே இல்லாததால் அங்கு யாருக்கும் தானம் செய்யும் (வண்மை) நிலை இல்லை; எதிர்த்துப் போரிடப் பகைவர் எவரும் இல்லாததால் அங்கு வீரத்தைக் காட்ட (திண்மை) வழியில்லை; பொய் பேசுபவரே இல்லாததால் அங்கு வாய்மையின் (உண்மை) பெருமை தெரியவில்லை; மக்கள் அனைவரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதால் அங்கு அறியாமை (வெண்மை) என்பதே இல்லை (த.இ.க.க)

Blog at WordPress.com.

Up ↑