பண்டைய காவியங்கள்தான் இன்றைய புதினங்களா?

இன்று காவியங்கள் பெரும்பாலும் தோன்றுவதில்லை. இதற்குக் காரணம் காப்பியம் என்ற இலக்கிய வடிவம்தான் இன்று புதினங்களாக மறுவடிவம் பெற்றுள்ளன என்று திறனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

முற்காலத்தில் உரைநடை வடிவில் புதினங்கள் எழுதப்பட்டனவா? கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் கிரேக்க எழுத்தாளர் லாங்கஸ், டேஃப்னிஸும் குளோவும் (Daphnis and Chloe – Longus) என்ற காதல் கதையை எழுதினார். உரைநடையில் எழுதப்பட்ட இது புதினம் என்ற இலக்கிய வடிவத்துக்கு அடித்தளம் இட்டது எனலாம். கி.பி. 1020 ஆம் ஆண்டில் ஜப்பானிய மொழியில் முராசகி சிக்கிபு (Murasaki Shikibu) எழுதிய 54 அத்தியாயங்கள் கொண்ட கெஞ்சியின் கதைதான் (The Tale of Genji) முதல் புதினம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தமிழிலும் உரை, உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் போன்ற உரைநடை இலக்கியங்கள் குறித்த குறிப்புகள் உள்ளன. எனவே காப்பியம் என்ற வடிவம்தான் உரைநடையில் எழுதப்படும் புதினமாக வளர்ச்சிபெற்றது என்று கூறுவது பொருத்தமானதாகத் தெரியவில்லை. புதினம் என்ற இலக்கிய வடிவம் தனியாகப் பரிணாம வளர்ச்சி பெற்று வந்தது என்றுதான் கூறவேண்டும்.

ஒடிசி, மகாபாரதம் போன்ற பண்டைய காப்பியங்கள் அக்காலத்தின் பிரபஞ்சவியல், அறவியல், வீரயுக ஒழுக்கம்  போன்றவற்றைப் பதிவுசெய்தது போல இக்கால புதினங்கள் இந்தக் காலத்தின் உளவியல், சமூகவியல், தத்துவப் பின்புலங்களைப் பிரதிபலிக்கின்றன. இது பொதுவாக இலக்கியங்களின் நோக்கும் போக்கும் என்பதால் காவியமே புதினமாக வளர்ச்சியுற்றது என்ற வாதத்துக்கு அரண் சேர்க்காது.

பண்டைய காப்பியங்கள் கடவுள்கள், அரக்கர்கள், இராக்கத விலங்குகள். போர்கள் போன்றவற்றை வருணித்தன. அதுபோல இக்கால புதினங்கள் தனிநபர் ஒழுக்கம், சமூகத்தில் அந்நியமாதல், சிக்கலான அமைப்புகளுக்கு எதிரான தனிமனிதனின் போராட்டம் ஆகியவற்றைப் பதிவுசெய்கின்றன. இது மேலை நாட்டு அல்லது வட்மொழி காப்பியங்களின் அடிப்படையில் கூறப்படுகிறது. தமிழில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே எழுந்த சிலப்பதிகாரம் என்ற மாபெரும் காப்பியம் இன்றைய புதினங்களின் பாடுபொருளையும் சாதாரண சாமானியர்களையும் பாத்திரங்களாகக் கொண்ட காப்பியம் ஆகும். ஆகவே காப்பியம் என்றாலே கடவுள்களையும், அரக்கர்களையும், போர்களையும் பற்றியது என்பது உண்மை அல்ல.

கவிதை நடையில் எழுதப்படவில்லை என்றாலும் சில நவீன புதினங்கள், பெரும் தலைமுறைகளையும், கலாச்சாரங்களையும், வரலாற்று யுகங்களையும் பற்றி பல தொகுதிகள் கொண்ட காவியத்துக்கு நிகரான படைப்புகளாக வெளிவந்துள்ளன. இருந்தாலும் இவற்றினால் மட்டுமே அவற்றைக் காப்பியங்கள் என்று கூறமுடியாது.

இன்றைய உலகின் பிளவுபட்ட, சந்தேகங்கள் நிறைந்த, பன்முகத்தன்மை கொண்ட இயல்புக்கு மிகவும் பொருத்தமான இலக்கிய வடிவமாகப் புதினங்கள் கருதப்படுகின்றன. மனித இருப்பின் பொருள் என்ன என்பதை விளக்கும் ஒரு சமகால உரையாகவும் அது செயல்படுகிறது. இப்படிப்பட்ட சிக்கலான கருப்பொருளை உரைநடையைப் போலவே கையாளும் நவீன கவிதைகள் ஆயிரக்கணக்காக படைக்கப்படும்போது இவற்றைப் பாடுபொருளாகக் கொண்ட காவியங்கள் தோன்றும் சாத்தியக் கூறு இல்லாமல் இல்லை.

ஜேம்ஸ் ஜாய்ஸின் மாபெரும் படைப்பான ‘யுலிசிஸ்’ (Ulysses) ஹோமரின் காவியமான ஒடிசியின் (Odyssey) இதிகாசப் பரிமாணத்தைப் பிரதிபலிக்கிறது. ஆனால், கடல் அரக்கர்களுடன் சண்டையிடுவதற்குப் பதிலாக அதன் கதாநாயகன் டப்ளின் நகரத்தின் சாதாரண அன்றாட வாழ்க்கையை எதிர்கொண்டு நகர்கிறான். இது உண்மைதான் என்றாலும் குடிமக்களின் அன்றாட குடும்பப் பிரச்சினையையும் அதன் பின்விளைவுகளையும் காவியத்தாலும் கையாளமுடியும் என்பதற்குச் சிலப்பதிகாரமே சான்றாகும்.

லாரி மெக்மர்ட்ரியின் ‘லோன்சம் டவ்’ (Lonesome Dove) அல்லது ரொபர்ட்டோ பொலான்யோவின் ‘2666’ போன்ற புதினங்கள் அவற்றின் பரந்த களங்கள், விரிவான கதைக்களங்கள் மற்றும் ஆழமான கருப்பொருள் ஆகியவற்றின் காரணமாக நவீன காப்பியங்களாகத் திறனாய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மரபுச் செய்யுள் வடிவிலான காப்பியங்கள் பொதுவாக இப்போது ஒரு முக்கிய சமூகக் கலாச்சார ஆற்றலாக இல்லை. இருந்தாலும் ஒரு பண்பாட்டின் அடையாளம், போராட்டங்கள், விழுமியங்களை வரையறுத்து பாதுகாக்கும் காப்பியத்தின் வரலாற்றுப் பொறுப்பைப் புதினம் வெற்றிகரமாகத் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது. காப்பியங்களைப் போன்றும் அதைவிட பிருமாண்டதுமான பல புதினங்கள் தோன்றியவண்ணம் உள்ளன. அதேநேரத்தில் அதிக எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும் இன்றைய யுகத்திலும் காவியங்கள் தோன்றாமல் இல்லை.

இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இதுவரை உலக அளவில் பதின்மூன்றுக்கும் மேற்பட்ட காப்பியங்கள் வெளிவந்துள்ளன என்பதும் குறிப்பாக ஸ்டானிஸ்லாவ் செர்னிஷெவிச்சால் (Stanislav Chernyshevich) 2025 ஆம் ஆண்டில் ருஷ்ய மொழியில் எழுதப்பட்ட நீண்ட காவியமான 1517. மிச்சேலும் டயானாவும் (1517. Michelle and Diana)  என்ற காப்பியம் வெளிவந்துள்ளது என்பதும் காவியமும் உரைநடைப் புதினமும் தனித்தனி இலக்கிய வடிவங்கள் என்பதை நிரூபிக்கின்றன. ஒன்றையொன்று பதிலீடு செய்ய முடியாது. பண்டையக் காலங்களிலும் மகா காவியங்கள் ஒரு சிலவே எழுந்துள்ளன. எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரம் என்ற மகாகாவியம் எழுந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே கம்பராமாயணம் என்ற மாபெரும் காப்பியம் எழுந்தது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகட்கு ஒரு முறையே மகா காவியங்கள் தோன்றுகின்றன என்பதை வைத்துப் பார்க்கும் போது எதிர்காலத்தில் மகாகவியங்கள் நிச்சயமாகத் தோன்றும். காப்பியம் என்பது வழக்கிழந்த வடிவம் அல்ல. காப்பியத்தின் இடத்தைப் புதினத்தால் ஒருக்காலும் இட்டுநிரப்ப முடியாது.

முனைவர் ஜேஆர்

Leave a comment

Blog at WordPress.com.

Up ↑