வைரமுத்து – வாழும்போதே வைரமானவன்

‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று மகாகவிஞர்களுக்கு எல்லாம் மகாகவியான பாரதியால் போற்றப்பட்ட நம் தாய்த்திருநாடு இன்னும் உலக உச்சமாம் நோபல் பரிசை வெல்லவில்லையே என்ற ஏக்கம் தமிழ் மேல் காதல் கொண்ட அனைவருக்குமே உண்டு!

ஆனால் ஓரளவுக்கு ஆறுதல் தரும் விதமாக ஒருமுறை அகிலனும் (1975) மறுமுறை ஜெயகாந்தனும் (2002) இம்முறை வைரமுத்துவும் (2026) குறைந்தபட்சம் இந்திய உச்சத்தைத் தொட்டு தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

மொழி அழகு – செந்தமிழாயின்

அதுவன்றோ அழகு

என்று ’எல்லா மொழியும் அழகுதான், தாய்மொழியோ கூடுதல் அழகு’ என மொழி குறித்தப் பார்வையில் தன் பரந்த நோக்கைப் பதிவுசெய்த கவிப்பேரரசு இந்தியா வழங்கிய இந்த விருதை ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கும் பொருத்தமாக அர்ப்பணித்து தமிழ் அன்னையின் மீது பன்னீர் தெளித்து அவளது மனதைக் குளிர்வித்து அவளது பூமுகத்தில் புன்சிரிப்பைத் தவழவிட்டிருக்கிறார்.

கவிப்பேரரசு ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு வரிக்கும் வர்ணமேற்றும் வல்லமை கொண்டவர். மேற்கோளாகக் காட்டக்கூடிய ஆயிரக் கணக்கான கவிதை வரிகளைப் பெற்றெடுத்தவர். வாழும்போதே தன் வரலாற்றை எழுதிக்கொண்டே செல்லும் வரம் பெற்றவர். அதனால்தான் ஒரு கவிஞர் இப்படிப் பாராட்டுகிறார்:

கற்கும்போதே கல்வியானவன்!

வாழும்போதே வைரமானவன்!

மாணவராகக் கல்லூரியில் படிக்கும் போதே அவரது கவிதை நூல் பாடமாக வைக்கப்பட்ட வியப்பான வரலாற்றைதான் ஒரு கவிஞன் இப்படிப் பாடுகிறான்!

தமிழ்ச் சமுதாயத்தின் ஒற்றுமை அற்ற சீர்குலைவைக் கண்டு கவிஞர் மனம் வெம்பிப் பாடுகிறார்:

மத சாதியால் பிரிந்துவிட்டோம்! – மனம்

அதைச் சகதியால் நிரப்பி விட்டோம்!

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற (குறள் 34) என்ற வள்ளுவரின் வாய்ப்பாட்டையே இதற்குத் தீர்வாகக் கவிஞர் வலியுறுத்துகிறார்.

மனம் அழகு – எனின்

யாவும் பேரழகு!

இவரது சிந்தனைகள் அறிவுநலம் அளிப்பதாகவும் முருகியல் இன்பம் ஊட்டுவதாகவும் பிரமிப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்: பின்வரும் கவிதை இதற்கு ஒரு சான்று:

மண்ணின் பொறுமைதான்

மலை

கரியின் பொறுமைதான்

வைரம்

தாயின் பொறுமைதான்

நீ

திகைக்கவைக்கும் சிந்தனை! தித்திக்கும் கருத்து! கவிப்பேரரசு வைரமுத்தே! தமிழின் பெருமைதான் நீ!

எளிய வார்த்தைகளாலும் வரிகளாலும் அரிய உண்மைகளை எளிமையாகக் கூறும் பேராற்றல் பெற்றவர் கவிப்பேரரசு வைரமுத்து!

இந்த பூமி

சிரிப்பவர் சொர்க்கம்

அழுபவர் கல்லறை!

இந்த உலகைப் பற்றிய உண்மையை எவ்வளவு எளிமையாகக் கூறிவிட்டார். மயக்கும் தத்துவத்தை இனிக்கும் தமிழில் எடுத்து ஊட்டுகிறார்! அற்புதம் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டே வைரமுத்துவின் கவிதை வரிகள்தான் போலும்!

இந்தியாவின் அரியபெரிய விருதைத் தமிழ் அன்னைக்கு வாங்கிக் கொடுத்த கவிஞனே! தமிழ் உணர்வுமிக்க நெஞ்சங்கள் அனைத்தும் உன்னை உச்சிமுகர்ந்து வாழ்த்துகிறது.

இன்னும் ஏராளமான காலம் இருக்கிறது. அடுத்த பெரும் விருதை அன்னைத் தமிழுக்கு கொண்டுவந்து சேர். உலகளாவிய பாடுபொருளை வரித்துக்கொள்! உன்னத காவியங்களைப் பாடு! வாழ்த்துகிறோம்!

முனைவர் ஜேஆர்

Leave a comment

Blog at WordPress.com.

Up ↑