காப்பியம் என்ற கலைவடிவம் இப்போது செத்துவிட்டது – ஆர்.ஜே.ரீஸ்

ஆர்.ஜே.ரீஸ் தம்முடைய அயலக மாணவர்களுக்கான ஆங்கில இலக்கியம் – ஓர் அறிமுகம் என்ற நூலில் காவியம் என்ற கலைவடிவம் இப்போது செத்துப்போய்விட்டது என்று கூறுகிறார். இந்தக் கடுமையான கூற்றை நியாயப் படுத்த அடுக்கடுக்கான வாதங்களை வைக்கிறார்.

நவீன எழுத்தார்கள் எவரும் இந்த வடிவத்தை இன்று பயன்படுத்துவதில்லை என்பது அவரது முதல் வாதம்.

ஆனால் அதற்காகப் பண்டையக் காவியங்களான இலியடையும் ஒடிசியையும், ஏனிடையும் டிவைன் காமெடியையும் இன்று யாரும் படித்துச் சுவைப்பதில்லை என்பது இதற்கு அர்த்தமல்ல; சிலராவது படிக்கிறார்கள் என்றாலும் பெரும்பாலான மக்கள் படிப்பதில்லை; கல்வி அரங்குக்குள் மட்டுமே அவை சுருண்டு படுத்துக்கொண்டு விட்டன என்று குறிப்பிடுகிறார்.

தற்கால இலக்கியத்தில் காப்பியம் என்பது ஓர் உயிரிழந்த கலைப்பொருள். வளர்ச்சி அடையாத வடிவம்.

பெரும்பாலும் காவியங்கள் கடவுள்கள் அல்லது மாபெரும் வீரர்களைப் பற்றிய வரலாற்று அல்லது புராணப் பாடுபொருட்களையே விதந்தோதுகின்றன. மரபு வழிக் காப்பியங்கள் போற்றும் இந்த மாபெரும் வீரர்கள் தங்கள் நாட்டுக் கலாச்சாரங்கள் மூலம் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். அக்கில்லஸ், அகமெம்னான், ஹெக்டர், ஒடீசியஸ் ஆகியோர் உயரிய கிரேக்கக் கலாச்சாரத்தின் அடையாளங்கள். இராமன், யுதிஷ்டிரர் ஆகியோர் ஆரியக் கலாச்சாரத்தின் அடையாளங்கள்.

ஆனால் தற்காலம் ஒரு வீர யுகம் அல்ல. உன்னதம், பிரமாண்டம் ஆகியவை உலர்ந்து காய்ந்து போய்விட்டன. அதனால் இன்றைய உலகில் ஓர் படைப்பாளி ஒரு காவியத் தலைவனை முன்னிலைப் படுத்துவது  காலத்திற்கு ஒவ்வாதது .ஆகும்.

டி. எஸ். எலியட் தன் பாழ்நிலம் (The Waste Land) என்ற கவிதையிலும், தாமஸ் மான் தன் மந்திர மலை (The Magic Mountain) என்ற புதினத்திலும் போருக்குப் பிந்திய நவீன உலகில் வீரம், தெய்வீகம், காதல் போன்ற அனைத்து உன்னதப் பண்புகளின் மரணத்தை பற்றிப் பாடியுள்ளனர்; ஆன்மீக வறட்சியும் உணர்ச்சியற்ற வறண்ட நிலையும் கொண்ட, துண்டு துண்டாய் உடைந்த நரகத்தைப் போன்ற, சாரமற்ற ஒரு சூழலாகவே அவர்கள் இந்த நவீன உலகைச் சித்தரித்துள்ளனர். இது முற்றிலும் உண்மையானதாகவே தோன்றுகிறது. இப்படிப்பட்ட உலகில் பழங்காவியங்கள் போற்றும் உன்னதங்கள் படிப்போருக்கு வெறுப்பூட்டும்.

நவீன வசகர்கள் இத்தகைய வீரர்களுடனும் இலக்கிய வடிவங்களுடனும் இணைத்து தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது.

காவியத் தலைவன் இல்லாத காவியத்தையோ வீரம் பற்றிய செய்தி இல்லாமல் ஒரு காவியத்தையோ பாட முடியாது. ஆகவே நவீன இலக்கிய உலகில் காவியத்துக்கு இடமில்லை.

நவீன காலம் கலைகள் விடுதலை பெற்று சுதந்திரமாக உலாவும் காலம் ஆகும். நவீன எழுத்தாளர்கள் மரபுக்கு அடிமையானவர்கள் அல்லர். நவீன இலக்கியம் வடிவத்திலும் உத்தியிலும் நொடிக்கு நொடி மாறிவருகிறது. யுகங்களுக்கு முற்பட்ட வடிவங்களுக்கும் மரபுகளுக்கும் ஒரு காவியக் கவிஞன் இணங்கிப் போக வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு காவியப் புலவன் முதலில் கடவுளையோ கலைதெய்வத்தையோ போற்றி வணங்க வேண்டும். ஒரு காவியக் கவிஞன் ஹோமரின் உவமைகளைப் பயன்படுத்த வேண்டும். ஒரு மரணம் அடைந்த வீரனின் நினைவஞ்சலியாக அல்லது ஒரு மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் விதமாக வீரவிளையாட்டுகள் காவியத்தில் இடம்பெற வேண்டும். காவியம் செயலோட்டத்தின் நடுவில் இருந்து தொடங்க வேண்டும்.  இந்த நிபந்தனைகள் கலை சுதந்திரத்திற்குக் குறுக்கீடுகள் ஆகும். இந்தக் காரணங்களால் ஒரு காப்பியத்தை எழுதும் உத்வேகமோ அல்லது படிக்கும் ஆர்வமோ இந்த நூற்றாண்டில் எழ வாய்ப்பே இல்லை.

இன்றைய உலகம் அதி வேகமாக ஓடுவதால் மனித வாழ்க்கை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகிறது. பொருளியல் நெருக்கடி உச்சத்தில் உள்ளது. மின்னணு ஊடகத்தின் படுபயங்கர வளர்ச்சியால் மானிட வாழ்க்கை தாக்கத்திற்கு உள்ளாகிறது. பழங்கால கிரேக்க சமூகத்திலும், எலிசபெத் அரசியின் காலத்து இங்கிலாந்திலும் வாழ்ந்த மக்களுக்கு இலியட், தேவதை ராணி போன்ற இலக்கியங்களைக் கற்று மகிழ நேரமும் ஆர்வமும் இருந்தன.

தற்கால மனிதனின் வாழ்க்கை மிகவும் மாறிவிட்டது. காவியங்களைப் படிக்க அவனுக்கு நேரமில்லை. இவையே தற்காலத்தில் காவிய வடிவத்தின் மரணத்திற்கு வழிகோலின.

தற்கால இலக்கியத்தில் காவியம் எழுதுவது சாத்தியமற்றது. ஏனெனில் ஏராளமான இலக்கியக் கொள்கைகள் தோன்றி விட்டன. அவை காப்பியம் என்ற இலக்கிய வடிவத்துக்கு துணைபோவதில்லை. நவீன காலத்தில் புதுப்புது இலக்கியக் கொள்கைகள் மலர்ந்து செழிக்கின்றன. பெர்டினாண்ட் டி சோசர் (Ferdinand de Saussure) ஜாக் தெரிதா (Jacques Derrida), ரோலண்ட் பார்த் (Roland Barthes), ஸ்டான்லி ஃபிஷ் (Stanley Fish), பியர் மாகரே (Pierre Macherey) ஆகியோரின் வருகையோடு இணந்து பல நுட்பமான கொள்கைகளும் தோன்றிவிட்டன. அமைப்புடைப்பு (Deconstruction), வாசகர் மையக் கோட்பாடு (Reader Response)[1], இன்மைக்கோட்பாடு (Theory of Absence) ஆகிய கோட்பாடுகள் ஒரு குறிப்பிட்ட உரை அல்லது பிரதி ஓரளவாவது அறிந்துகொள்ளக்கூடிய தெளிவான பொருளைக் கொண்டது என்ற விமரிசன நிலைப்பாட்டின் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளன. படைப்பாளியின் மரணத்தை இந்தக் கொள்கைகள் பிரகடனப்படுத்தின. எனவே ஆசிரியரின் நோக்கங்களும் அவர் சொல்ல வந்த செய்திகளும் முக்கியம் இழந்து போகின்றன. அதுமட்டுமல்லாமல் பொருளின் பொருண்மை நிலையற்றது (differed/deferred) என்ற தெரிதாவின் இறுதி வாதத்தினையும், பொருள் என்பது பிரதிக்குள் இல்லை, அதற்கு வெளியேயுள்ள இன்மைகளில்தான் (absences) இருக்கிறது என்ற மாகரேயின் கருத்தினையும் தொடர்ந்து, பொருள் என்ற கோட்பாடே முற்றிலும் தற்காலிகமானதாகவும் சார்புடையதாகவும் (contingent) மாறிவிட்டது. ஒரு பேரிலக்கியம் (காப்பியம்) ஓர் ஒருங்கிணைந்த செய்தியையும் பொருளையும் கொண்டிருக்க வேண்டும் என்பதால் சிதறுண்ட பலபொருள் சாத்தியங்களால் நிழலிடப்பட்டுள்ள சமகால இலக்கியத்தில் ஒரு பேரிலக்கியத்திற்கான இடம் என்பதே இல்லாது போய்விடுகிறது. உண்மையைக் கூறப்போனால் காப்பியம் என்னும் ஓர் பேரிலக்கியம் இப்போது இறந்துவிட்டது.

தொகுத்தளித்தவர்: முனைவர் ஜேஆர்


[1] வாசகர் மையக் கோட்பாடு (Reader Response) என்பது வாசிப்பை, வாசகருக்கும் பிரதிக்கும் இடையில் நிகழும் ஒரு துடிப்பான பரிமாற்றமாகப் பார்க்கும் ஓர் இலக்கியக் கோட்பாடு ஆகும். பிரதியின் பின்னே மறைந்திருக்கும் ஆசிரியரின் பொருளைத் தேடி அலைவதை விட்டுவிட்டு அந்தப் படைப்போடு உங்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட எதிர்வினைகள், சிந்தனைகள், உணர்வுபூர்வமான தொடர்புகள் ஆகியவற்றை ஆராய்ந்து விளக்கி நிலைநாட்டுகிறது இக்கோட்பாடு

Leave a comment

Blog at WordPress.com.

Up ↑