Welcome to WordPress! This is your first post. Edit or delete it to take the first step in your blogging journey.
காலந்தோறும் காவிய முயற்சி
[2021 ஆம் நூற்றாண்டின் தமிழ் மகா காவியம் ஒன்று தன் வண்ணச் சிறகை விரித்துப் பறக்க எத்தனிக்கும் இந்த ஒளிமயமான ஆண்டில் இந்த வலைத்தளத்தில் காவியம் குறித்த ஒரு முன்னோட்டம் தொடர்ந்து வெளிவர உள்ளது. இந்தக் கட்டுரைகளைப் படிக்கும் வாசகர்கள் காவியம் குறித்தத் தங்கள் கண்ணோட்டங்களைப் பதிவுசெய்யலாம்]
கி.மு. 2100 ஆம் ஆண்டில் இருந்தே உலக இலக்கியங்களில் பெருங்காவியம் படைக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன எனலாம். அதற்கு முன் அவை வாய்மொழிக் காப்பியங்களாக வழங்கி வந்திருக்கலாம். ஏறத்தாழ 2100 ஆம் ஆண்டில் மெசொப்பொத்தேமியாவில்[1] களிமண் பலகைகளில் சுமேரிய மொழியில் எழுதப்பட்ட கில்காமேஷ் காவியம்தான் (Epic of Gilgamesh) உலகின் முதன்முதலில் எழுதப்பட்ட காவியம் என்று கருதப்படுகிறது. இது கி.மு. 1300 களில் பாபிலோனியப் பாடலாக முழுமையாகத் திருத்தி எழுதப்பெற்றது.
வாய்மொழிக் காப்பியங்களாக விளங்கிய கிரேக்கக் காப்பியங்களான ஹோமரின் இலியடும் ஒடிசியும் கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றும், வடமொழிக் காப்பியமான வால்மீகியின் இராமாயணமும், வியாசரின் மகாபாரதமும் கி.மு 5-4 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றும் கருதப்படுகின்றன. இவை காலத்தை வென்று தடம் பதித்தவை. இடைப்பட்டக் காலங்களில் பல காப்பியங்கள் தோன்றி மறைந்திருக்கலாம்.
தமிழிலும் காலந்தோறும் பல காப்பிய முயற்சிகள் நடந்தன. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுங் காப்பியங்கள் ஆகிய சொற்றொடர்கள் தமிழில் நடந்த எழுச்சிமிக்கக் காப்பிய முயற்சிகளுக்குச் சான்றாகும். தகடூர் யாத்திரை போன்ற பல காப்பியங்களின் பெயர்கள் மட்டுமே இன்றளவும் நின்று நிலவுகின்றன.
ஆனால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஓர் இளவரசனான இளங்கோவடிகள் குடிமக்களைப் பற்றிப் பாடிய சீர்மிகும் காப்பியமான சிலப்பதிகாரம் தோன்றியது. ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கால புதினத்தைப் போன்ற அமைப்புடன் ஒரு நவீன காவியத்தைப் பாடிய இளங்கோவடிகளின் அறிவுத் திறத்தைப் போற்றி மகிழாமல் இருக்க முடியாது. இதனால்தான் மகாகவி பாரதியார் “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்தத் தமிழ்நாடு” என்று விதந்தோதினார்.
அடுத்து ஓர் ஒப்புயர்வற்ற ஒளிமிகும் காப்பியத்தைப் பெற தமிழ் அன்னை ஆயிரம் ஆண்டுகள் தவம் கிடக்கவேண்டி இருந்தது. கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும் அவன் அழியா அழகுடைய இராம காவியத்தை உலகுக்குத் தந்ததும் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு. எந்த ஓர் உலக மகாகாவியத்துக்கும் சவாலாக நின்று கருத்திலும் கற்பனையிலும், மொழிநடையிலும் முருகியலிலும், உத்தியிலும் உன்னதத்திலும் உயர்ந்த வானைத் தொட்டவன் கம்பன். அடுத்து ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்னரும் அது போன்றதொரு மகத்துவம் தமிழில் படைக்கப்படவில்லை என்பது கால வெள்ளத்தைப் புலவர்களின் துணையுடன் நீந்திவந்துகொண்டிருக்கும் தமிழின் குறையல்ல தமிழர்களின் குறையே!
கி.மு. 2100 ஆம் ஆண்டில் தோன்றிய கில்காமேஷில் தொடங்கிய காப்பிய முயற்சி 2025 ஆண்டில் ஸ்டானிஸ்லாவ் செர்னிஷெவிச் எழுதிய 1517: மிச்சேலும் டயானாவும் என்ற பெரும் காப்பியம் வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலக மொழிகளில் இதுவரை படைக்கப்பட்ட காவியங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 372 ஆகும்.
காப்பியம் என்றால் மகத்துவம். காப்பியம் என்றால் உன்னதம். பிற இலக்கிய வகைகளால் தொட முடியாத சிகரத்தைத் தொடுவதுதான் அதன் இலக்கு. மனிதக் கற்பனையின் உச்சம். மனித அறிவின் கொடுமுடி. மனிதம் என்பதே அதன் கருப்பொருள். இதைச் சிந்தனை வானில் உலா வந்து கொண்டிருக்கும் பேரொளிச் சுடரான கம்பன் நான்கே வரிகளில் இப்படிச் சுருக்கி வகுக்கிறான்:
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால் (கம்ப. 84)[2]
இப்படிப்பட்ட ஓர் உலகம் தோன்ற வேண்டும் என்பதுதான் கம்பன் காவியத்தின். பெருங்கனவு. உலத்தில் தோன்றிய உன்னதக் காப்பியங்கள் அனைத்தின் அறப்பிழிவும் இதுதான். இது வேறொன்றும் இல்லை. சிந்தனைச் சிற்பி காரல் மார்க்ஸ் காணத்துடித்தப் பொதுமை உலகம்தான். விவிலியம் மாதிரியாகப் படைத்துக்காட்டிய ஈதண் தோட்டம்தான் (The Garden of Eden). மனித குலம் அடைய வேண்டும் என்று கவிஞர்கள் கனவுகண்ட சொர்க்க பூமிதான். இதுதான் காப்பியத்தின் ஒரே நோக்கமும் இலக்கும் ஆகும்.
மானிட சிந்தனையின் மகத்துவமானவைகளை மட்டுமே தலைசிறந்த காவியங்கள் மிகப் பிரமாண்டமாக எடுத்து இயம்புகின்றன இந்த நோக்கில் கற்பனை வளத்தாலும், கருத்துகளின் சிறப்பாலும் உலகில் இதுவரை தோன்றிய காப்பிய முயற்சிகளில் வானத்தின் உச்சியைத் தொட்ட வெகு சில ஈடு இணையற்ற காப்பியங்களை இப்படிப் பட்டியலிடலாம்:
- இலியட்/ஒடிசி: கிரேக்கம், ஹோமர், கி.மு 8 ஆம் நூற்றண்டு
- வால்மீகி இராமாயணம்/வியாசரின் மகாபாரதம்: வடமொழி. கி.மு. 5-7 ஆம் நூற்றாண்டு
- ஏனிட்: விர்ஜில், இத்தாலி, கி.மு 29-19
- சிலப்பதிகாரம்: இளங்கோவடிகள், தமிழ், கி.பி. 2 ஆம் நூற்றாண்டு
- கம்பராமாயணம்: கம்பர், தமிழ், கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
- இழந்த சொர்க்கம்: மில்ட்டன், ஆங்கிலம், 17 ஆம் நூற்றாண்டு (கி.பி.1667)
[அடுத்து வெளிவர இருக்கும் கட்டுரை ‘காவியமும் புதினமும் ஒன்றல்ல’. இரண்டும் வெவ்வேறு வடிவங்கள். காவியத்தைப் புதினத்தால் பதிலீடு செய்ய முடியாது. காவியம் உலகளாவியது. காவியம் என்பது கனவுகளின் தொகுப்பு. உன்னதங்களின் உலா. பட்டை தீட்டிய கருத்து வைரைங்களாலான பொற்சரம். படித்து ஆய்ந்து அறிவின்பம் பெறுவதற்கானது. படித்துப் பொழுது போக்கி உணர்வின்பம் மட்டுமே பெறுவதற்கானது அல்ல.]
[முனைவர் ஜேஆர்]
[1]மெசொப்பொத்தேமியா (Mesopotamia) என்பது தைகிரிசு மற்றும் யூபிரட்டீஸ் ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான நிலப்பரப்பைக் குறிக்கும். நவீன ஈராக், குவைத், துருக்கி, மற்றும் சிரியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்தப் பகுதி, உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது. சக்கரம், எழுத்து வடிவம், வேளாண்மை ஆகியவை இங்குதான் தோன்றின.
[2] இராமனின் கோசல நாட்டில் வறுமையே இல்லாததால் அங்கு யாருக்கும் தானம் செய்யும் (வண்மை) நிலை இல்லை; எதிர்த்துப் போரிடப் பகைவர் எவரும் இல்லாததால் அங்கு வீரத்தைக் காட்ட (திண்மை) வழியில்லை; பொய் பேசுபவரே இல்லாததால் அங்கு வாய்மையின் (உண்மை) பெருமை தெரியவில்லை; மக்கள் அனைவரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதால் அங்கு அறியாமை (வெண்மை) என்பதே இல்லை (த.இ.க.க)
Leave a comment